Tamil News
அரையாண்டு விடுமுறையில் பள்ளிகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை – தமிழக அரசு எச்சரிக்கை..!!
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
இதையடுத்து கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் கொரோனா வருவதால் குறைந்து காணப்பட்டதால், கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் முதற்கட்டமாக திறக்கப்பட்டது.
இதையடுத்து ஒன்று முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றி சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தவும், முக கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை மாணவர்கள் கடைப்பிடிப்பதை தீவிரமாக கண்காணிக்கவும் பள்ளிக்கல்வித்துறை மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டது.
இந்த சூழலில் நடப்பாண்டிற்கான அரையாண்டு தேர்வு நடத்தப்படாவிட்டாலும், கடந்த 25ஆம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.
அதன்படி மாணவர்கள் தற்போது விடுமுறையில் உள்ளனர். இருப்பினும் தனியார் பள்ளிகள் சில பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காமல் வகுப்புகள் நடத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் ஜனவரி 2-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் பள்ளிகளை திறந்து வகுப்புகளை நடத்தினால் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
