Connect with us

    “சூர்யாவை விட்ருங்க; எல்லாத்துக்கும் நானே பொறுப்பு” – வருத்தம் தெரிவித்தார் ஜெய்பீம் பட இயக்குநர் ஞானவேல்..!!

    Cinema

    “சூர்யாவை விட்ருங்க; எல்லாத்துக்கும் நானே பொறுப்பு” – வருத்தம் தெரிவித்தார் ஜெய்பீம் பட இயக்குநர் ஞானவேல்..!!

    சமீபத்தில் வெளியான
    ஜெய்பீம் திரைப்படத்தில் இடம் பெற்ற காட்சி ஒன்று வன்னியர்களை அவமதித்து விட்டதாக இந்த படத்திற்கு எதிராகவும் சூர்யாவிற்கு எதிராகவும் வன்னிய அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது.

    இந்த விவகாரத்தில் நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும்; மேலும் 5 கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என பாமக சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில்,
    ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது:

    “தமிழ் நிலம் எப்போதும் நல்ல முயற்சிகளை வாழ்த்தி வரவேற்கும் என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது.

    ஜெய்பீம் படத்திற்கு மிகப்பெரிய அளவில் வாழ்த்தும் வரவேற்பும் அளித்த அனைவருக்கும் நன்றி.

    உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட இத்திரைப்படம் பொய் வழக்குகளால் பாதிக்கப்படும் பழங்குடி மக்களின் வலிகைளைப் பிரதிபலிப்பதாக அமைய வேண்டும் என விரும்பினேன்.

    1990-களில் ராஜாகண்ணு, விர்பலிங்கம் போன்ற பழங்குடிகள் மரணம், சிதம்பரம் பத்மினி, அத்தியூர் விஜயா போன்ற ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு நிகழ்ந்த துயரம் என பல்வேறு அத்துமீறல்கள் நடந்தன.

    இன்றுவரையிலும் அம்மக்களுக்கு சமூக பாதுகாப்பின்மையோடு அது தொடரவே செய்கின்றன.

    எளிய மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து கம்யூனிஸ்ட் இயக்கமும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் தொடர்ந்து நீதிக்கான போராட்டத்தை நடத்தி வருகின்றன.

    நீதிபதி சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்தபோது நடத்திய வழக்கில் காவல் துறையும் நீதித்துறையும் இணைந்து செயல்பட்டால், எளிய மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும் என்பதை நம்பிக்கை வெளிச்சம் தருகிற வகையில் படமாக்கினோம்.

    மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், ஜெய்பீம் படத்தைப் பார்த்துப் பாராட்டியதோடு பழங்குடி மக்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியான நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் படத்தின் நோக்கத்தை முழுமை பெற செய்தார்.

    அதற்காக எனது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஜெய்பீம் திரைப்படத்திற்கு எல்லா தரப்பினரிடமிருந்தும் கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளித்தது.

    அதேபோல படத்திற்கு எழுந்த சில எதிர்மறைக் கருத்துகள் நான் சற்றும் எதிர்பாராதவை.

    பின்னணியில் மாட்டப்படும் ஒரு காலண்டர் படம், ஒரு சமூகத்தைக் குறிப்பதாகப் புரிந்துகொள்ளப்படும் என நான் அறியவில்லை.

    1995 காலத்தைப் பிரதிபலிப்பதே அந்த காலண்டரின் நோக்கமே அன்றி, குறிப்பிட்ட சமூகத்தின் குறியீடாக அதைக் காட்ட வேண்டும் என்பது எங்கள் யாருடைய நோக்கமும் அல்ல.

    சில வினாடிகள் மட்டும் வருகிற அந்த காலண்டர் படம் படப்பிடிப்பின்போதும் போஸ்ட் புரடெக்ஷன் பணியின்போதும் எங்கள் யாருடைய கவனத்திலும் பதியவில்லை.

    அமேசான் ப்ரைமில் படம் வெளிவரும் முன்பே, பெரிய திரையில் பல்வேறு தரப்பினரும் படத்தைப் பார்த்தனர். அப்போது கவனத்தில் வந்திருந்தாலும் அதை மாற்றியிருப்போம்.

    நவம்பர் 1ஆம் தேதி இரவு அமேசானில் படம் வெளிவந்தும், காலண்டர் படம் பற்றி சமூக வலைதளங்கள் மூலம் அறிந்தவுடன், உடனடியாக 2ஆம் தேதி காலையே அதை மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

    யாரும் கேட்பதற்கு முன்பே, அந்த காலண்டர் படம் மாற்றப்பட்ட பிறகு, எங்களுக்கு தனிப்பட உள்நோக்கம் எதுவும் இல்லை என்பது எல்லோருக்கும் புரியும் என்று நம்பினேன்.

    இயக்குநரா நான் மட்டுமே பொறுப்பேற்க வேண்டிய விஷயத்திற்கு சூர்யாவை பொறுப்பேற்கச் சொல்வது துரதிர்ஷ்டவசமானது.

    தயாரிப்பாளராகவும், நடிகராகவும் படத்தில் சூர்யா பழங்குடியின மக்களின் துயரங்களை அனைவருக்கும் கொண்டுசேர்ப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டிருந்தார்.

    இயக்குநராக என்பொருட்டு அவருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தத்தைப் பதிவுசெய்ய விரும்புகிறேன்.

    அனைத்து சமூகத்தினருக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படுத்தும் கலை வடிவமே படம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

    அனைத்து சமூகத்தினருக்கும் எந்தவொரு தனிப்பட்ட நபரையோ, எந்தவொரு குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.

    இதன் பொருட்டு மன வருத்தம் அடைந்தவர்களுக்கும் புண்பட்டவர்களுக்கும் என் உளப்பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இக்கட்டான சூழலில் அக்கறையோடு எங்களுடன் நிற்கிற திரையுலகத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆதரவளித்த முகமறியா அனைத்து நட்புகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!