Tamil News
தாய் இறந்த அதிர்ச்சியை தாங்க முடியாமல், புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டி, தாயின் சடலத்தை வீட்டுக்கு எடுத்து வந்த மகன்…!!
தமிழகத்தில் தாயின் பிரிவை தாங்க முடியாததால், தாய் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி, தாயின் சடலத்தை தோண்டி எடுத்து வீட்டுக்கு எடுத்து வந்த மகனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள பரவாய் கிராமத்தில் ஆதிதிராவிடர் காலணியில் வசித்து வருபவர் பாலமுருகன்.
இவர் தனது சிறுவயதிலேயே தனது தந்தையை இழந்து தாய் மூக்காயியின் அரவணைப்பில் வாழ்ந்து வந்துள்ளார்.
உலகமெங்கும் கொரோனா பரவலால், திடீர் திடீரென ஏற்பட்ட உயிரிழப்புகள், சோகம் இவரது குடும்பத்திலும் ஏற்பட்டது.
கடந்த ஆண்டு இவரது தாயும் கொரோனாவால் உயிரிழக்கவே, பெரும் துயருக்கு ஆளான பாலமுருகன், மனநிலை பாதிக்கப்பட்டார்.
தாய் மூக்காயி புதைக்கப்பட்ட சுடுகாட்டிலே தங்கிய அவர் அங்கேயே சுற்றி சுற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு தனது தாய் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி அவரது சடலத்தை எடுத்து கொண்டு வீட்டிற்கே கொண்டு வந்துவிட்டார்.
அக்கம் பக்கத்தில் மிகுந்த துர்நாற்றம் வீசியதால், பக்கத்து வீட்டுக்காரர்கள் சந்தேகம் அடைந்து பாலமுருகன் வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.
அங்கு, எலும்புக்கூடாக மூக்காயி சடலம் வீட்டுக்குள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
