Tamil News
மாரிதாஸ் வாழ்க என நெற்றியில் எழுதி வைத்துக் கொண்டு கோவை கலெக்டர் அலுவலகம் வந்த நபர்…!!!
கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்த நபர் தன் நெற்றியில் மாரிதாஸ் வாழ்க என்றும் உடலில் தி.மு.க.,வுக்கு எதிரான வாசகங்களையும் எழுதி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரபல யூடியூபரான மாரிதாஸ், முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் குறித்தும், மாநிலத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், மாநில அரசுக்கு எதிராகவும் கருத்து ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்
இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர் ராமசுப்ரமணியன் என்பவர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து, அந்த புகாரின்பேரில் 4 பிரிவுகளின் கீழ் மாரிதாஸ் கைது செய்யப்பட்டு வரும் 23-ம் தேதி வரை நீதிமன்றக் காவலிலும் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நாளான நேற்று கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு பேரூரை சேர்ந்த கந்தசாமி, 42 என்பவர் வந்தார். அவர் தன் நெற்றியில், ‘மாரிதாஸ் வாழ்க’ என்று எழுதியிருந்தார்.
மேலும், அவரது கைகளில், ‘தி.மு.க., சிற்றரசு ஒழிக’ என்பது உட்பட பல்வேறு வாசகங்களை எழுதியிருந்தார்.
அவரை போலீசார் தடுத்து நிறுத்தி ‘நீங்கள் யார், எந்த ஊர்’ என, கேட்டதற்கு ‘நான் இந்தியாவை சேர்ந்தவன்’ என, பதில் அளித்தார்.
கந்தசாமி கூறுகையில், “மாரிதாஸ் எப்போதும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு பேசுவார்.
அவரை விடுதலை செய்ய வேண்டும்,” என்றார்.
போலீசார் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
