Tamil News
“இத பெருசு படுத்தாதீங்க” – நோயாளிக்கு வாங்கிய இட்லியில் இறந்த நிலையில் கிடந்த தவளை; சமாதானம் செய்த ஓட்டல் உரிமையாளர்..!!
கும்பகோணத்தில் உள்ள ஹோட்டலில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு பார்சல் வாங்கிச்சென்ற இட்லியில் தவளை இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் மாடாகுடியை சேர்ந்த முருகேசன் என்பவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினருக்கு அங்குள்ள ஹோட்டலில் இட்லி பார்சல் வாங்கிச் சென்றுள்ளார்.
பின்னர் அரசு மருத்துவமனைக்கு சென்றவுடன் அந்த பார்சலை நோயாளி பிரித்து இட்லியை சாப்பிட முயன்றுள்ளார்.
அப்போது இட்லியில் தவளை ஒன்று இறந்த நிலையில் கிடந்தது கண்டு நோயாளி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உறவினர் இட்லி வாங்கி வந்தவர் பார்சல் வாங்கி வந்த இட்லியை எடுத்துக்கொண்டு அந்த ஹோட்டலுக்கு சென்று ஹோட்டல் உரிமையாளரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
அப்போது ஹோட்டலில் இருந்தவர்கள் இட்லி வாங்கி சென்றவரை சமாதானப்படுத்தி உள்ளார். இதுபற்றி வெளியே கூற வேண்டாம் என்று கூறியுள்ளனர்.
மேலும், இட்லிக்கு உண்டான பணத்தை கொடுத்து சமாதானம் செய்துள்ளனர்.
மேலும், இட்லி ஊற்ற வைத்திருந்த மாவை இட்லி வாங்கியவரின் கண்முன்னே ஹோட்டல் உரிமையாளர் கீழே கொட்டி உள்ளார்.
இந்த பிரச்சனை பெரிதாகி விடக் கூடாது என்பதற்காக ஹோட்டலை உடனடியாக பூட்டிவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
ஹோட்டலில் இருந்த ஒரு நபர் இந்த காட்சிகளை வீடியோ எடுத்து டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இட்லியில் தவளை கிடந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதுபோன்று பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் சாப்பிடும் உணவை அஜாக்கிரதையாக சமைத்த ஹோட்டல் உரிமையாளருக்கு அபராதம் விதிப்பதோடு, ஹோட்டலை மூடி சீல் வைக்க வேண்டும் என நகராட்சி சுகாதார துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.