Tamil News
தனியாக கழன்று ஓடிய பள்ளி பேருந்தின் பின்சக்கர டயர்; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 15 குழந்தைகள்..!!
தாராபுரம் அருகே தனியார் பள்ளி பேருந்தின் பின் சக்கர டயர் தனியாக கழன்று ஓடியதில் பள்ளி மாணவர்கள் காயமடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் வகுப்பு முடிந்தவுடன் மாணவர்கள் பள்ளி பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அந்த பேருந்து உடுமலை சாலையில் வந்து கொண்டிருந்த போது, பேருந்தின் பின் பக்க டயர் தனியாக கழன்று ஒடியுள்ளது.
இதை பார்த்த டிரைவர் துரிதமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இருப்பினும் திடீரென பிரேக் போட்டதால் பேருந்தில் இருந்த 15 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர்.
இதனால் அருகில் உள்ள மருத்துவமனையில் காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்தின் சக்கரங்கள் கழன்று ஓடும் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து, “வட்டார போக்குவரத்து அலுவலர் தாராபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள வாகனங்களை சோதனை நடத்தி தரச் சான்றிதழ் வழங்கிய பின்பு பயன்படுத்தப்பட வேண்டும்.
மேலும், மாணவர்களிடம் அதிக கட்டணங்கள் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மாணவர்களின் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
