Tamil News
15 வருடம் நன்றியுடன் இருந்த நாய் இறந்ததை பிளக்ஸ் வைத்து அஞ்சலி கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய குடும்பம்..!
வீட்டில் 15 ஆண்டுகளாக வளர்த்து வந்த செல்லப்பிராணி நாய் இறந்ததை தாங்க முடியாமல், பிளக்ஸ் வைத்து கண்ணீருடன் அக்குடும்பத்தினர் அஞ்சலி செலுத்திய சம்பவம் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கல்யாணராமன். இவர் தனது வீட்டில் கடந்த 15 வருடங்களாக ஜாக்கி என்ற நாட்டு நாய் ஒன்றினை வளர்த்து வந்துள்ளார்.
இந்த நாயை கல்யாணராமன் தங்களது வீட்டில் உள்ள ஒரு நபராக கருதி வந்துள்ளார்.
இந்த நாயானது இவர்களுக்கு மட்டுமின்றி, அதன் சுற்றி இருக்கும் பகுதிக்கும் செல்லப்பிராணியாகவும் இருந்து வந்துள்ளது. இதை அவர்கள் செல்லமாக ஜாக் என்றே அழைப்பர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாய் ஜாக்கி, உடல் நலக்குறைவால் இறந்தது.
ஜாக்கியின் பிரிவை தாங்க முடியாத அதன் உரிமையாளர்கள் அதற்கு முறைப்படி இறுதிச்சடங்கு நடத்தியுள்ளனர்.
மேலும் கல்யாணராமனின் மகன் கணேஷ் ராம் தனது செல்லப்பிராணி மறைவுக்கு அஞ்சலி பதாகை வைக்க திட்டமிட்டுள்ளார்.
அதன்படி தனது நண்பர்களுடன் சேர்ந்து ஜாக்கியின் மறைவுக்கு பிளக்ஸ் வைத்துள்ளார்.
அந்த பிளக்சில், “எங்களுடன் 15 வருடம் நன்றியுடன் இருந்த ஐந்தறிவு ஜீவனின் அரசனே.. ஆறறிவு ஜீவனின் செல்லமே.. நீ இந்த மண்ணை விட்டு பிரிந்தாலும், என்றும் எங்கள் மனதை விட்டு பிரியாமல் இருக்கும் உனது நினைவுகள் கோடி கோடி..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தங்கள் செல்லப்பிராணி இறந்த சோகம் தாங்க முடியாமல் அதற்கு பிளக்ஸ் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ள குடும்பத்தினரின் செயல் அப்பகுதியில் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
