Viral News
கல்வி கற்க ஏது வயது; 53-ம் வயதில் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பெண்; குவியும் பாராட்டுக்கள்..!
சிறு வயதில் நமக்கு படிக்க வேண்டும் என ஆசை இருந்தாலும், குடும்பத்தில் ஏற்பட்ட வறுமை காரணமாக படிப்பை தொடர முடியாமல் பலர் பாதியிலேயே படிப்பை விட்டுள்ளனர்.
அதன்பிறகு, திருமணம், குடும்பம் குழந்தை என படிப்பை மறந்து விடுகின்றனர்.
ஆனால், படிப்பதற்கும், சாதிக்க நினைப்பவர்களுக்கும் வயது முக்கியமில்லை என நிரூபித்துள்ளார் மகாராஷ்டிரா சேர்ந்த 53 வயதுடைய பெண்.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் கல்பனா. சிறுவயதிலேயே இவரின் தந்தை இறந்ததால் இவரின் குடும்பம் மிகுந்த நிதி நெருக்கடியில் சிக்கியது.
இதனால் இவரால் தனது பள்ளி படிப்பை தொடர முடியவில்லை.
அப்போது அவருக்கு வெறும் 16 வயது தான்.
இதையடுத்து கல்பனா திருமணம் செய்து கொண்டு, கணவன், மகன்கள் என குடும்ப வாழ்க்கையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.
இருந்தாலும், அவருக்குக் கல்வி மீதான தாக்கம் இருந்து கொண்டே இருந்துள்ளது.
இந்த நிலையில், கல்வியை இடைநிற்றல் செய்தவர்களுக்காக அரசு நடத்தும் இரவு பள்ளி குறித்து ஆசிரியர் ஒருவர் மூலம் கல்பனாவுக்கு தெரியவந்தது.
பாதியில் விட்ட தனது கல்வியை மீண்டும் தொடங்க முடிவு செய்த கல்பனா, 2021-ம் ஆண்டு முதல் கணவன் மற்றும் மகனுக்குத் தெரியாமல் கல்வி கற்று வந்துள்ளார்.
இந்நிலையில் அயர்லாந்தில் இருக்கும் அவரது மகனுக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக அவரது மகன் இந்தியா வந்தபோது தான் தனது தாய் இரவு பள்ளியில் சேர்ந்து படித்து வருவது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து தாயின் விருப்ப படியே அவரை தேர்வு எழுதவும் அனுமதித்துள்ளார்.
இதையடுத்து 53 வயதில் கல்பனா 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி 79.6 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றுள்ளார்.
கிட்டத்தட்ட 37 ஆண்டுகளுக்குப் பிறகு அவரின் பள்ளி கனவு முழுமையாக நிறைவடைந்துள்ளது.
இது குறித்து அவரது மகன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும் கல்பனாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், பலருக்குத் தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.
