Cinema
அப்பா சாலை விபத்தில் மரணம்; வீட்டில் 3 அக்காக்கள்; வெறியுடன் படித்த மாணவி; கண்கலங்கிய நடிகர் கார்த்தி..!!
நடிகர் சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார்.
மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார் திரு. சிவகுமார்.
தகுதியான மாணவ, மாணவிகளை அடையாளம் கண்டு, தனது அறக்கட்டளை மூலம் பாராட்டி வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சிவக்குமார் கல்வி நிலைய மற்றும் அறக்கட்டளை விருதுகள் 2022 ஆம் ஆண்டுக்கான நிகழ்வு அகரம் பவுண்டேஷன் சார்பில் நடைபெற்றது.
முன்னதாக இந்த நிகழ்வில் பேசிய நடிகர் கார்த்தி, மாணவர்கள் கையில் எளிதில் வழிமாறி செல்வதாகவும், அதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டுமென்றும், அரசு இதை கவனித்து சரிசெய்யும் என்று நம்புவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இந்நிகழ்வில் பேசிய மாணவி ஒருவர் தன் வறுமையான வாழ்க்கை பற்றியும், கல்வி நிலை பற்றியும், தந்தையை இழந்தது குறித்தும் மிகவும் உருக்கமாக பேசியுள்ளார்.
அதில், “அனைவருக்கும் வணக்கம்.. என் பெயர் பிருந்தா. விழுப்புரத்தில் இருந்து வருகிறேன்.
நான் 6-வது முதல் 11-ஆம் வகுப்பு வரை விழுப்புரம் பெண்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.
7-வது படிக்கும் பொழுது ஒரு நாள் இரவு ஃபோன் வந்தது. அப்பாவுக்கு சாலை விபத்து ஏற்பட்டு விட்டதாக சொன்னார்கள். அதன் பிறகு 2 நாட்கள் அவரை மருத்துவமனையில் வைத்துவிட்டு மூன்றாவது நாள், அவர் சாலை விபத்தில் இறந்து விட்டதாக கூறினார்கள்.
எனக்கு இரண்டு அக்காக்கள் இருக்கின்றனர்.
எங்கள் குடும்பத்தில் மூன்று பெருமே பெண்கள் என்பதால் அம்மாவுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை.
அப்பா கோயில் அர்ச்சகராக இருந்தார். அம்மாவோ குழந்தைகளுக்கு நல்ல கல்வியை தர வேண்டும் என்று மிகவும் கஷ்டப்பட்டார்கள்.
அதன் பிறகு பள்ளி ஆசிரியர்கள் தான் எங்களுடைய பள்ளி செலவுகளை பார்த்துக் கொண்டார்கள்.
நான் 12 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது விழுப்புரத்தில் அரசு மாதிரி பள்ளி என்று ஒன்று திறந்தார்கள்.
நான் அங்கு தேர்வாகி படித்தேன். எது நடந்தாலும் நன்றாக படிக்க வேண்டும், வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்பது அப்பாவின் கனவு.
அதனால் நன்கு படித்து போன வருடம் 12ஆம் வகுப்பு பொது தேர்வில் 593 மதிப்பெண்கள் எடுத்தேன்.
நான்கு சப்ஜெக்ட்டில் நூற்றுக்கு நூறு எடுத்தேன்.அண்ணா யுனிவர்சிட்டியில் பொறியியல் கலந்தாய்வில் முதல் ரேங்க் ஸ்கெட்யூல் செய்தேன்.
467 மதிப்பெண்கள் நீட் தேர்விலும் எடுத்தேன். எங்களுடைய முதல் அக்கா சிஏ படிக்கிறார்.
எங்களுடைய அனைத்து செலவுகளையும் பள்ளி ஆசிரியர்கள் மேற்கொள்கின்றனர். நான் படித்த அரசு மாதிரி பள்ளியில் விடுதி இருக்கிறது.
எனக்கு தேவையான அனைத்தையும் வழங்கினார்கள்.
அங்கு ஸ்டேட் போர்டு சிலபஸ் மட்டுமல்லாமல் சிறப்பு பொதுத் தேர்வுகளுக்கான எல்லா பயிற்சியும் எனக்கு கொடுக்கப்பட்டது.
அதனால்தான் என்னால் இவை அனைத்தையுமே படிக்க முடிந்தது.
இதன் பிறகு நான் மருத்துவம் படிக்க விரும்புகிறேன்.
என் அப்பாவை காப்பாற்ற முடியாமல் போனது. இந்த மாதிரி வேறு யாருக்கும் வரக்கூடாது என்பதால் நான் மருத்துவம் படித்து, டாக்டராகி, ஒரு அரசு மருத்துவமனையில் சென்று நான் சேவை செய்வேன்.
என்னுடைய அப்பா பெயர் பாலன். அம்மா பெயர் விஜயலட்சுமி. அவர்களுடைய மகள் என்பதை நான் இந்த இடத்தில் பெருமையாக தெரிவித்துக் கொள்கிறேன்.
அகரம் பவுண்டேஷனில் என்னை அழைத்து இங்கு வரவழைத்ததற்கு நன்றி.” என்று முழு வீச்சில், சில இடங்களில் தழுதழுத்த குரலிலும் தன்னம்பிக்கையுடன் பேசி முடித்தார்.
இந்த மாணவி பேசியதை பார்த்து நடிகர் சிவகுமார் மற்றும் நடிகர் கார்த்தி ஆகிய இருவருமே கண் கலங்கினர்.
