World News
கர்ப்பமாக இருக்கும் போதே மீண்டும் கர்ப்பமான பெண்; வியப்பில் டாக்டர்கள்..!
அமெரிக்காவைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவருக்கு நடந்த நிகழ்வும், அதன் பின்னர் நடந்த ஒரு விஷயமும், பலரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த காரா வின்ஹோல்டு (Cara Winhold) என்ற பெண்மணிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நிகழ்ந்துள்ளது.
இதன் பின்னர், அந்த தம்பதியருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மீண்டும் குழந்தையை பெற்றுக் கொள்ள, காரா மற்றும் அவரது கணவர் முடிவு செய்துள்ளனர்.
ஆனால், அடுத்தடுத்து மூன்று முறை, காராவுக்கு கருச்சிதைவு ஏற்பட்டது.
இதனால், தம்பதியினர் சற்று மனம் கலங்கி போயுள்ளனர்.
ஆனாலும், மனம் தளராமல், மீண்டும் குழந்தையை பெற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளனர்.
அதன் படி, கடந்த ஆண்டில் மீண்டும் கருவுற்றுள்ளார் காரா.
இந்நிலையில், அவர் கர்ப்பமாக இருக்கும் போதே, அடுத்த ஒரு மாதத்தில் மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார் காரா.
இதனால், அவர்கள் ஆச்சரியத்தில் உறைய, இந்த மருத்துவ நிலைக்கு சூப்பர்ஃபெடேஷன் (Superfetation) என்று பெயர் உள்ளது.
ஏற்கனவே ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் காலத்தில், மீண்டும் கர்ப்பம் ஏற்பட்டால், அது சூப்பர்ஃபெடேஷன் என அழைக்கப்படுகிறது.
இதன்படி, முதல் கர்ப்பம் ஆனதில் இருந்து, சில நாட்கள் அல்லது சில வாரங்கள் கழித்து இது நிகழலாம் என்றும் தெரிகிறது.
இரண்டு முறை கருவுற்று, கர்ப்பமாக இருந்த காரா வின்ஹோல்டிற்கு, தற்போது இரண்டு ஆண் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.
மேலும், இந்த இரண்டு குழந்தைகளும் ஆறு நிமிட இடைவெளியில் பிறந்துள்ளன.
இதுகுறித்து பேசிய காரா, “என்னுடைய கர்ப்ப பயணத்தில் நடந்தவை அனைத்தும், அதிசயம் என 100 சதவீதம் நான் நம்புகிறேன்” என பேரானந்தத்தில் தெரிவித்துள்ளார்.
மூன்று முறை கர்ப்பம் அடைந்தும், கருச்சிதைவு காரணமாக குழந்தை பெறும் வாய்ப்பை இழந்த காராவுக்கு, இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ள சம்பவம், பலருக்கும் ஆச்சரியத்தை வரவழைத்துள்ளது.
