Tamil News
“சோழப் பேரரசின் வரலாற்றை உலகுக்கு நாம் உரக்க சொல்லவில்லை” – தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா ட்வீட்..!
மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம்.
இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது.
இந்நிலையில் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் குறித்து பதிவு செய்து உள்ளார்.
தஞ்சை பெரிய கோயிலின் கட்டிடக் கலையின் புகழ் குறித்து வடிவமைப்பாளரான ஸ்ரவண்யா ராவ் பேசும் வீடியோ ஒன்றை ஆனந்த் மகேந்திரா பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் ஸ்ரவண்யா ராவ், தஞ்சை பெரிய கோயிலுக்கு நேரடியாக சென்று அதன் கட்டிடக் கலையின் சிறப்பு குறித்து விளக்குகிறார்.
அந்த வீடியோவில் ஸ்ரவண்யா ராவ் பேசுகையில் , “11-ம் நூற்றாண்டில் கட்டிய சோழர் கோயிலான பிரகதீஸ்வரர் கோயிலில் நாம் உள்ளோம். ராஜ ராஜ சோழன் கட்டிய கோயில் இது.
யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக இந்த கோயில் விளங்குகிறது. எந்தவித இயந்திரமும் இல்லாத அந்த காலத்தில் இந்தக் கோயிலை ஆறு கிலோ மீட்டருக்கு சாய்வு தளம் அமைத்து கோயில் கோபுரத்தை கட்டியுள்ளார்.
படம் வரைந்து அதன் அடிப்படையில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. பேரண்டத்தின் இடது வலது குறித்து இந்த கோவில் பேசுகிறது. ஆறு பூகம்பங்களை தாங்கி நிற்கிறது” என்றார்.
ஸ்ரவண்யா ராவ் பேசும் இந்த வீடியோவை பகிர்ந்து மகேந்திரா தெரிவித்துள்ள குறிப்பில், “திறமையான வடிவமைப்பாளர் ஸ்ரவண்யா ராவின் வழங்கியுள்ள அற்புதமான தகவல்கள் அடங்கிய வீடியோ இது.
சோழப் பேரரசு எவ்வளவு சக்தி வாய்ந்தது மற்றும் தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு முன்னேறியது என்பதை நாம் உண்மையில் உள்வாங்கவில்லை என்று நினைக்கிறேன்.
அதன் வரலாற்று முக்கியத்துவத்தை உலகிற்கு நாம் உரக்கச் சொல்லவில்லை” என பதிவிட்டுள்ளார்.
