Tamil News
சினிமா பாணியில் காதல் திருமணம் ஜோடியை காரில் கடத்த முயன்ற கும்பல்; நடுரோட்டில் அலறிய காதல் ஜோடி..!!
கோவையில் காதல் திருமணம் செய்த ஜோடியை, பெண்ணின் பெற்றோரே காரில் கடத்திய நிலையில், லட்சுமி மில் சிக்னலில் அவர்களின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் காதல் தம்பதியை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கோவை மாவட்டம் மணியகாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரர் (22).
இவர் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த சினேகா (19) என்பவரை காதலித்து வந்தார்.
இந்த சம்பவத்தைப் பற்றி பெண்ணின் வீட்டாருக்கு தெரியவர அவர்கள் இந்த காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காதல் செய்து வந்த இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் முடிந்த கையோடு அவர்கள் இருவரும் பாதுகாப்பு கேட்டு சரவணம்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இருதரப்பினரையும் காவல்துறையினர் பேசி சமாதானப்படுத்தி அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து விக்னேஸ்வர் மற்றும் அவரது மனைவி சினேகா இருவரும் நேற்று சினேகாவின் வீட்டார் அவர்களை அழைத்ததாக கூறி அவர்களை காண சென்றுள்ளனர்.
அப்போது பெண்ணின் வீட்டார் அந்த ஜோடியை கோவிலுக்கு அழைத்துச் செல்வதாக கூறி அவர்களை காரில் அழைத்துக்கொண்டு அவினாசி சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பெண்ணின் வீட்டார் ஒருவர் விக்னேஸ்வர் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது.
வெகுநேரமாக அந்த கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென சாலை நெரிசலால் கார் நிற்கும் சூழல் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தால் பயத்தில் இருந்த காதல் ஜோடிகள் கார் நின்றதை கண்டதும் அலறியடித்துக்கொண்டு காரிலிருந்து வெளியே வந்தனர்.
அவர்கள் அலறி அடுத்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அந்த காதல் ஜோடிகள் சுற்றியிருந்தவர்களிடமும் மற்றும் அங்கு இருந்த காவலரிடமும் விஷயத்தை கூறி ரோட்டில் கதறி அழுதனர்.
அவர்கள் கூறியதை கேட்ட போலீசார் பெண் வீட்டாரிடம் சென்று இதைப்பற்றி கேட்டபோது அவர்களோ எங்களிடம் கத்தி எதுவும் இல்லை வேண்டும் என்றால் காரை சோதனையிட்டு கொள்ளுங்கள் என்றும் மேலும் நாங்கள் அவர்களை கோவிலுக்கு தான் அழைத்து செல்கிறோம் என்றும் கூறினார்.
அந்தப் பெண்ணின் வீட்டார் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காதல் ஜோடியை மீட்டு பந்தயசாலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
காரில் கடத்தி சென்று கொலை செய்து விடுவார்கள் என காதல் திருமணம் செய்த தம்பதி நடுரோட்டில் கதறியதால் பரபரப்பான சூழல் நிலவியது.
இந்நிலையில் ஏற்கனவே இந்த காதல் விவகாரம் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டது என்பதால் தம்பதியையும், பெண்ணின் பெற்றோரையும் சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
