Viral News
வளர்ப்பு நாய்க்கு பத்திரிகை அச்சடித்து, உறவினர்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக வளைக்காப்பு (Baby shower) நிகழ்ச்சி நடத்திய தம்பதி; குவியும் பாராட்டுக்கள்..!
சேலம் மேச்சேரி அருகே தனது வளர்ப்பு நாய்க்கு அதன் உரிமையாளர் வளைகாப்பு (Baby shower) நடத்தி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர்கள் கலாச்சாரத்தில் ஒரு பெண் திருமணம் முடிந்து கருவுற்றால் அப்பெண்ணிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடத்தப்படுவதுண்டு.
ஆனால் வீட்டில் வளர்த்து வரும் செல்ல பிராணியான நாய்களுக்கு சிறப்பு வளைகாப்பு விழாவை நடத்தி அனைவரின் கவனத்தையும் ஒரு தம்பதியினர் ஈர்த்துள்ளனர்.
சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியை சேர்ந்த புகைப்பட கலைஞர் நடராஜன். இவரது மனைவி பெயர் சுசீலா.
இவர்கள் கடந்த 20 மாதங்களாக ‘ஹைடி’ என்ற ஆண் பொமேரியன் நாயை வளர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் இதற்கு ஜோடியாக ஒன்பது மாதங்களுக்கு முன்பு ‘சாரா’ என்ற மற்றொரு பெண் பொமேரியன் நாயை வாங்கி வளர்த்து வந்தார்.
இதையடுத்து தற்பொழுது ‘சாரா’ கர்ப்பம் தரித்துள்ள நிலையில், பெண்களுக்கு நடத்தப்படுவதை போலவே வளைகாப்பு நடத்த வேண்டுமென மகள்கள் ஹேமா, ஹரிணி ஆகியோர் விரும்பினர்.
இதற்கு பெற்றோர்களும் சம்மதம் தெரிவிக்க, கடந்த 13ஆம் தேதி வளைகாப்பு விழா கோலாகலமாக நடந்தது.
இதற்காக தனியாக பத்திரிக்கை அடித்து உறவினர்களுக்கு வழங்கப்பட்டது.
பின்னர் தனித்தனி இருக்கைகளில் இரு நாய்களையும் அமர வைத்து மஞ்சள் குங்குமமிட்டு சாராவுக்கு வளையலை மாற்றினர்.
தொடர்ந்து விழாவுக்கு வந்தவர்களுக்கு இனிப்பு உள்ளிட்ட ஐந்து வகையான அறுசுவை உணவுகள் பரிமாறப்பட்டன.
அத்துடன் சாராவுக்கு வளையல் மாட்டிய சுமார் 30 பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, தட்டு, சுண்ணாம்பு, தாலி கயிறு, மஞ்சள், குங்குமம் ஆகியவையும் வழங்கப்பட்டது.
தாங்கள் வளர்த்த நாய்களுக்கு வளைகாப்பு செய்த சம்பவம் எந்த உயிராக இருந்தாலும் அதன் மேல் அன்பு செலுத்த வேண்டும் என்ற இவர்களின் மனிதநேயம் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியது
