World News
கட்டியணைத்த காதலர்; விலா எலும்புகள் உடைந்து நொறுங்கியதால் கதறி அழுத இளம்பெண்..!
சீனாவில் காதலர் கட்டியணைத்ததால் இளம்பெண்ணின் விலா எலும்புகள் உடைந்து போன சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஹூனான் மாகாணத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் இளம்பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார்.
அவர் கடந்த மே மாதம் சக அலுவலக நண்பர்களுடன் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவர் விளையாட்டாக அவரை இறுக அணைத்திருக்கிறார்.
அப்போது அந்தப் பெண்ணுக்கு அதிக வலி ஏற்பட்டிருக்கிறது.
ஆனால், அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத அவர், மாலை பணிமுடிந்து வீடு திரும்பியிருக்கிறார்.
இரவு வலி அதிகமாக இருக்கவே, சூடு நீரில் ஒத்தடம் வைத்துக்கொண்டு படுத்திருக்கிறார்.
மறுநாளும் வலி குறையாததால் அலுவலகத்தில் விடுமுறை சொல்லிவிட்டு, வீட்டிலேயே இருந்து விட்டார்.
பின்பு வலி அதிகமாக இருந்ததால் மருத்துவமனைக்கு சென்ற அவர், மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி ஸ்கேன் எடுத்துள்ளார்.
அதில் அந்த பெண்ணின் 3 விலா எலும்புகள் உடைந்திருந்ததையடுத்து, சில மாதங்கள் வேலைக்குச் செல்லாமல் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், மருத்துவ சிகிச்சை முடிந்து வேலைக்கு திரும்பிய அந்த இளம்பெண், இறுக அணைத்து தன் விலா எலும்புகளை உடைத்த நபரிடம் தன்னுடைய மருத்துவ செலவுகளுக்கான ரசீதை காட்டி பணம் கேட்டுள்ளார்.
அதற்கு அந்த நபர், “நான் கட்டிப் பிடித்ததால்தான் உனக்கு இப்படி ஆனது என்பதற்கான ஆதாரம் என்ன இருக்கிறது?” எனக்கூறி சிகிச்சை செலவை ஏற்க மறுத்திருக்கிறார்.
வேறு வழியில்லாமல் அந்த பெண் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், “இடைப்பட்ட காலத்தில் அந்தப் பெண் வேறு எங்கும் எலும்பை உடைத்துக் கொள்ளவில்லை.
எனவே, இளம்பெண்ணை இறுக அணைத்து அவர் எலும்புகள் உடைவதற்கு காரணமாக இருந்த இளைஞர் 10,000 யுவான் அந்தப் பெண்ணுக்கு வழங்கவேண்டும்” என உத்தரவிட்டுள்ளனர்.
