Viral News
திடீரென ஏற்பட்ட கரண்ட் கட்; இருட்டில் மணப்பெண்ணுக்கு பதிலாக அவரது சகோதரிக்கு மாற்றி தாலி கட்டிய மாப்பிள்ளை..!
மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற
திருமணம் ஒன்றில் திடீரென கரண்ட் கட் ஆனதால் இருட்டில் மணப்பெண்ணிற்கு பதிலாக மணப்பெண்ணின் சகோதரிக்கு மணமகன் தாலி கட்டிய சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வரும் இரண்டு சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடத்த அவர்களது பெற்றோர் முடிவு செய்திருந்தனர்.
இதற்காக இரு வரன்கள் பார்த்து பேசி தேதியும் குறித்துள்ளனர்.
இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ரமேஷ்லாலின் இரண்டு மகள்களான நிகிதா மற்றும் கரிஷ்மாவிற்கு திருமண ஏற்பாடு நடைபெற்றது.
இரவு நேரத்தில் திருமணம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது திடீரென மின்சாரம் தடைபட்டுள்ளது.
அந்த நேரத்தில் மணப்பெண்கள் இருவரும் ஒரே மாதிரியான உடை மற்றும் முக்காடு போட்டிருந்துள்ளனர்.
இதனால் இரு மணப்பெண்களும் பார்க்க ஒரே மாதிரியாக இருந்துள்ளனர்.
அப்போது திருமணத்தை நடத்தும் பண்டிதர் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.
மணமகன் கையில் தாலியை கொடுத்து கட்டவும் வைத்துள்ளார்.
தொடர்ந்து திருமண மண்டபத்தில் இருந்த அக்னி குண்டத்தை சுற்றி வரும்படி கூறியுள்ளார்.
அப்போதும் மணப்பெண்கள் மாறியது யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது.
இதனையடுத்து மணமகன்கள், புதுமணப்பெண்ணை தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.
வீட்டிற்கு சென்று பார்த்த போது தான் மணப்பெண் மாறிய விவகாரம் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக மணப்பெண்ணும், மாப்பிள்ளை குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த இடமே கலவரமாக மாறியது. இதனையடுத்து சிறிது நேரத்தில் நடந்த நிகழ்வுகளை புரிந்து கொண்ட இரு வீட்டாரும் சமரசம் செய்து கொண்டனர்.
இதனையடுத்து திருமண புரோகிதரிடம் இரண்டு குடும்பத்தினரும் முறையிட்டுள்ளனர்.
அதற்கு அந்த புரோகிதர் அடுத்த நாள் மீண்டும் ஒரு முறை திருமண சடங்குகள் நடைபெற்று சரியான மணபெண்ணுடன் மாப்பிள்ளையை அனுப்பி வைக்கும்படி கூறினார்.
மின் தடை காரணமாக ஏற்பட்ட குழப்பத்தில் மணப்பெண் மாறிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
