Tamil News
லாரியில் சீர்வரிசை, 2000 பேருக்கு விருந்து; திருவாரூரையே திரும்பி பார்க்க வைத்த மஞ்சள் நீராட்டு விழா..!
திருவாரூரில் நடைபெற்ற மஞ்சள் நீராட்டு விழா ஒன்று சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் பெண்கள் பருவ வயதை அடைந்தவுடன் மஞ்சள் நீராட்டு விழா கொண்டாப்படுவது வழக்கம்.
இந்த விழாவுக்கு பெண்ணின் தாய்மாமன்கள் வீட்டில் இருந்து சீர்வரிசைகள் கொண்டு வரப்படுவது வழக்கம்.
இது காலம் காலமாக தமிழகத்தில் தொன்று தொட்டு நடைபெற்று வரும் தமிழர் பண்பாடு.
இது சம்பந்தமான காட்சிகள் கிழக்கு சீமையிலே என்ற திரைப்படத்தில் மிக அழகாக சித்தரிக்கும் இடம் பெற்றிருக்கும்.
அந்த வகையில் திருவாரூரில் ஊரே வியக்கும் வகையில் பெண் ஒருவருக்கு பூப்புனித நீராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது.
திருவாரூர் கீழ வீதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகள் அட்சயரத்னா.
முருகன் கடந்த 2010ஆம் ஆண்டு வீட்டு வேலை செய்து கொண்டிருக்கும்போது கீழே விழுந்து தலையில் அடிபட்டு பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதன் காரணமாக முருகனின் குடும்பம் பொருளாதார ரீதியாக கடுமையாக கஷ்டப்பட்டு இருக்கிறது.
இதனை அடுத்து மூன்று ஆண்டு காலமாக முருகன் இழந்த துயரத்தில் இருந்த அவரது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சிகரமான நிகழ்வு நடக்கிறது.
முருகனின் மகள் அட்சயரத்னா கடந்த சில நாட்களுக்கு முன் வயதுக்கு வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து முருகனின் ஆசைப்படி அவரது உடன்பிறந்த சகோதரிகள் அட்சயரத்னாவிற்கு மஞ்சள் நீராட்டு விழாவை நடத்தினர்.
இதனையடுத்து திருவாரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முருகனின் ஆசைப்படி 2 ஆயிரம் நபர்களுக்கு உணவளித்து விருந்து கொடுக்கப்பட்டுள்ளது.
600 சீர்வரிசை தட்டுகளுடன் லாரியில் மிகப் பிரமாண்டமாக கொண்டு வரப்பட்டது.
மேலும், அலங்கரிக்கப்பட்ட லாரியில் செண்டை மேளங்கள் முழங்க, அந்த சிறுமியை ஊர்வலமாக அழைத்து வந்துள்ளனர்.
ஊரே வியக்கும் வகையில் சகோதரரின் மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழாவினை கோலாகலமாக நடத்தி மகிழ்ச்சி அடைந்தார்கள் பெண்ணின் அத்தைகள்.
இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இறந்து போன முருகனுக்கு ஆழ்ந்த இரங்கலும், மகளுக்கு வாழ்த்துக்களும், அத்தைகளுக்கு பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.
குடும்பம் ஒன்றாக இல்லாத இந்த காலத்தில் அண்ணன் மகளுக்கு இவ்வளவு பெரிய சீர்வரிசை செய்து விழா எடுத்தது பலரையும் கவர்ந்து உள்ளது.
