Tamil News
“அடிப்பாவி! பெத்த பிள்ளைய கொன்னுட்டியே”- 6 வயது மகளை அடித்து கொன்ற கொடூர தாய்; நெஞ்சை உருக்கும் சோகம்..!!
திருவண்ணாமலை அடுத்த அரடாப்பட்டு கிராமத்தில் ஆறு வயது மகளை கரும்பால் அடித்து கொலை செய்த கொடூர தாயை வெரையூர் காவல் நிலைய போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்,
குழந்தையின் உடலை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் அடுத்த உள்ள அரடாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன் வயது (38).
இவர் தார் சாலை அமைக்கும் கூலி தொழிலாளி, இவருடைய மனைவி சுகன்யா வயது (30).
இவர்களுடைய மகன் பிரசன்னதேவ் வயது (8), மகள் ரித்திகா வயது (6). இருவரும் அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளில் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் பூபாலன், சுகன்யா இடையே கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது.
இதில் சுகன்யா கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு அடிக்கடி சென்று விடுவாராம்.
அவரை பெற்றோர் சமாதானம் செய்து கணவருடன் சேர்ந்து வாழ அனுப்பி வைப்பார்கள் என கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூபாலன் சாலை அமைக்கும் பணிக்காக தேனி மாவட்டத்திற்கு சென்றுள்ளார்.
நேற்று விடுமுறை நாளில் ஊருக்கு திரும்பிய நேரத்தில், குழந்தைகள் வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது, ரித்திகா சத்தமிட்டு அழுதுள்ளார். தாய் சுகன்யா இதனை பலமுறை கண்டித்தும் ரித்திகா கேட்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த சுகன்யா கரும்பை எடுத்து ரித்திகாவை அடிக்கவே, அவரின் தலையின் பின்பகுதியில் காயம்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
மகள் மயங்கி விழுந்ததை கண்டு பதறிப்போன சுகன்யா, ரித்திகாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மகளின் உடலை கட்டியணைத்தவாறே கண்ணீருடன் வீட்டிற்கு திரும்பிய நிலையில், ரித்திகாவின் உடலை கணவர் மற்றும் உறவினர்களுக்கு பயந்து கீழ்பென்னாத்தூரில் உள்ள தாயின் வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார்.
இந்த தகவல் அறிந்து வந்த பூபாலன் மகளின் சடலத்தை பார்த்து கதறியழுதார்.
பின்னர், இதுகுறித்து வெறையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ரித்திகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சுகன்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெற்ற தாயே மகளை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
