Tamil News
ஒன்றரை வயது குழந்தையின் உயிரை பறித்த வாழைப்பழம்; கதறிய பெற்றோர்..!
திண்டுக்கல்லில், ஒன்றரை வயது குழந்தையின் தொண்டையில் வாழைப்பழம் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாகுல் அமீது.
இவருடைய மகன் சையது மவுலானா( வயது1½). இன்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, அங்கிருந்த வாழைப்பழ துண்டை எடுத்து வாயில் போட்டு விழுங்கினான்.
சிறிது நேரத்தில் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதைப்பார்த்த பெற்றோர் பதறித்துடித்தனர். பின்னர் குழந்தையை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து திண்டுக்கல் நகர் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய மருத்துவர்கள், ‘குழந்தைகளுக்கு இரண்டு வயதுவரை வாழைப்பழமே கொடுத்தாலும் அதை தங்கள் கையாலேயே கூழாக்கி, சிதைத்துக் கொடுக்க வேண்டும்.
பொதுவாக பழம் இவ்வளவு ஆபத்தானது அல்ல. இது அரிய நிகழ்வு.
இனி பெற்றோர் வாழைப்பழத்தை நேரடியாக குழந்தைகள் கையில் கொடுக்காமல், அவர்களே கொடுக்க வேண்டும்.
ஒருவேளை குழந்தைகளே நேரடியாக சாப்பிட்டால் அவர்களை உடன் இருந்து பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்”என்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியிலுள்ள மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
