Tamil News
மட்டன் பிரியாணியில் கிடந்த கரப்பான் பூச்சி; வைரலாகும் வீடியோ..!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அசைவ ஓட்டலில் சாப்பிட்ட பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்ததால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர், இது தொடர்பாக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் டவுன் மணிகூண்டு அருகில் 5 ஸ்டார் என்ற அசைவ ஓட்டல் உள்ளது.
இந்த ஓட்டலில் நேற்று மதியம் நேத்தபாக்கம் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி என்பவரும் அவரது மனைவியும் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் இருவர் மட்டன் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, அதில் கரப்பான்பூச்சி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பின்னர் ஓட்டல் ஊழியரிடம் அந்த தம்பதியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்த வீடியோ தற்போது சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஏற்கனவே இந்த ஓட்டலில் சிக்கன் பிரியாணி மற்றும் சிக்கன் தந்தூரி சாப்பிட்டு மாணவன் ஓருவரும், சிறுமி ஒருவரும் என 2 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்தேறியுள்ளன.
இந்நிலையில், பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக கடந்த மாதம், இதே ஓட்டலில் சிக்கன் பிரியாணி மற்றும் தந்தூரி சாப்பிட்டு சிறுவனுக்கு திடீரென்று கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு, பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அது போன்று, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் தேதி, ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள 7 ஸ்டார் பெயரிலான அசைவ ஹோட்டலில் ‘தந்தூரி சிக்கன்’ சாப்பிட்ட 10 வயது சிறுமி லோஷினி உடல் உபாதைகள் ஏற்பட்டு உயிரிழந்தார்.
இந்நிலையில் தற்போது மட்டன் பிரியாணியில் கரப்பான் பூச்சி கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
