Tamil News
“இந்து மத முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்யவே ஆசை” – தமிழக இளைஞரை மணந்த ஆப்பிரிக்க பெண் பேட்டி..!
இந்து மத முறைப்படி ஆப்பிரிக்க நாட்டு பெண் தமிழக இளைஞரை திருமணம் செய்த நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் சுப்பிரமணியம், தர்மலட்சுமி தம்பதி.
இவர்கள் தற்போது கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர்.
இவர்களது மகன் முத்து மாரியப்பன். இவர் டிப்ளமோ மெக்கானிக் என்ஜினீயரிங் படித்துவிட்டு மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கேம்ரூன் பகுதியில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார்.
முத்து மாரியப்பன் வேலை செய்து வந்த அதே கம்பெனியில் ஆப்பிரிக்காவில் உள்ள கேம்ரூனில் வசிக்கும் எம்மா எஞ்சிமா மொசொக்கே என்பவரின் மகள் வால்மி இனாங்கா மொசொக்கே என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் 2 பேரும் தங்களது காதல் விவகாரத்தை இருவரது வீட்டிலும் தெரிவித்து சம்மதம் பெற்றனர்.
மேலும் வால்மி இனாங்கா இந்தியாவில் திருமணத்தை நடத்த வேண்டும் என்று முத்துமாரியப்பனிடம் கூறியுள்ளார்.
அதன்பிறகு அவர்கள் கோவை வந்தனர்.
இன்று கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் இவர்களது திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றது.
இதில் மாப்பிள்ளையின் பெற்றோர் மற்றும் உறவினர்களும், மணப்பெண்ணின் பெரியப்பா ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த மொக்கோசோ லுக்காஸ் ஜேம்ஸ் ம்பொமே, அவரது மனைவி ஷோபி எஞ்சே நமொன்டோ மற்றும் உறவினர்கள், பெண்ணின் நண்பர்கள் என வந்திருந்தனர்.
அதனை தொடர்ந்து திருமண மண்டபத்தில் பெண்ணை பல்லக்கில் வைத்து அழைத்து வந்தனர்.
பின்னர் பெரியவர்கள் தாலி எடுத்துக்கொடுக்க மணமகன் முத்துமாரியப்பன் மணமகள் வால்மி இனாங்கா கழுத்தில் தாலி கட்டினார்.
தொடர்ந்து மணமேடையை அவர்கள் சுற்றி வந்தும், மணமகளுக்கு கையில் மோதிரமும், காலில் மெட்டியையும் மணமகன் அணிவித்து விட்டார்.
இதுகுறித்து மணமகள் வால்மி இனாங்கா கூறும்போது,
நாங்கள் இருவரும் கேம்ரூன் பகுதியில் உள்ள ஒரே கம்பெனியில் வேலை செய்து வருகிறோம்.
அங்கு எங்கள் இருவருக்கும் இடையே பழக்கமாகி காதல் ஏற்பட்டது.
இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தோம்.
எனக்கு இந்து முறைப்படி தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசை இருந்தது.
அதன் அடிப்படையில் இருவரும் முடிவு செய்து தற்போது திருமணம் முடிந்துள்ளது. எங்களுக்கு பெருமையாக உள்ளது என்றார்.
திருமணத்தில் பங்கேற்ற ஆப்பிரிக்க மணமகளின் உறவினர்கள் தமிழக பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை அணிந்து பங்கேற்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.