Tamil News
விவசாயம் பார்த்து கொண்டே, படித்து நீட் தேர்வு மூலம் டாக்டருக்கு படிக்க செல்லும் அரசுப் பள்ளி மாணவியை வீடு தேடிச் சென்று வாழ்த்திய கலெக்டர்..!!
விவசாய வேலை பார்த்துக்கொண்டே படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப்பள்ளி மாணவியை வீடு தேடிச்சென்று மதுரை கலெக்டர் ( collector) அனிஷ்சேகர் வாழ்த்தினார்.
நீட் தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட நிலையில், மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பித்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகளில் 4,349 இடங்கள், தனியார் கல்லூரிகளில் 2,650 இடங்கள் என, இளநிலை மருத்துவப் படிப்பில் (MBBS) மொத்தம் 6,999 இடங்கள் உள்ளன.
அவற்றில் மாணவர்களை சேர்க்க தரவரசைப்பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவபடிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சில தினங்களாக நடைபெற்றது.
இதில், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பானா மூப்பன்பட்டி. கிராமத்தை சேர்ந்த ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்த மாணவி தங்கப்பேச்சிக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.
தங்கப்பேச்சியின் தந்தை பெயர் சன்னாசி. இவருடைய மனைவி மயில்தாய்.
இருவரும் விவசாய கூலி வேலை செய்து வருகிறார்கள். இவர்களுடைய மகள் தான் தங்கப்பேச்சி.
இவர் விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் படித்தவர்.
கடந்த முறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இருந்தாலும் அரசு ஒதுக்கீட்டில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
இதனால், பெற்றோருடன் சேர்ந்து தானும் விவசாய வேலை செய்து வந்தார.
அதில் கிடைத்த வருமானத்தின் மூலம் படித்து தங்கப்பேச்சி மீண்டும் நீட் தேர்வு எழுதினார்.
இதில் 256 மார்க் வாங்கிய தங்கப்பேச்சிக்கு, அரசின் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் மருத்துவம் படிப்பதற்கான இடம் கிடைத்தது.
குமரி மாவட்டம் மூகாம்பிகா மருத்துவ கல்லூரியில் அவருக்கு படிக்க இடம் கிடைத்துள்ளது. அதே நேரத்தில் கல்வி மற்றும் விடுதி கட்டணத்தை அரசே ஏற்றிருக்கிறது.
மாணவி தங்கப்பேச்சி, விரைவில் மருத்துவ கல்லூரிக்கு செல்ல இருக்கிறார்.
இந்நிலையில் மாணவி தங்கப்பேச்சியை மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகர் நேற்று அவரது வீடு தேடிச்சென்று பாராட்டினார்.
மேலும், அவருக்கு மருத்துவ படிப்புக்கான வெள்ளை நிற கோட், ஸ்டெதஸ்கோப் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வழங்கி கலெக்டர் பாராட்டினார்.
மாணவியின் பெற்றோருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
மேலும், மருத்துவராகி ஏழை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் எனவும், பல அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஒரு ரோல்மாடலாக இருக்க வேண்டும் என்றும் தங்கப்பேச்சிக்கு அறிவுரை வழங்கினார்.
