Cinema
இரண்டு கிட்னிகளும் செயலிழப்பு; உயிருக்கு போராடும் காமெடி நடிகர், உதவுமா நடிகர் சங்கம்..??
நகைச்சுவை மூலமாக மக்களை சிரிக்க வைத்த நடிகர் போண்டாமணி , தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்து பரிதாப நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையை பூர்விகமாகக் கொண்ட போண்டா மணி 1991-ம் ஆண்டு வெளியான ‘பவுனு பவுனுதான்’ என்ற பாக்யராஜ் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.
அதைத்தொடர்ந்து சிறிய கதாபாத்திரம் தொடங்கி காமெடி நடிகராக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார்.
குறிப்பாக ‘சுந்தரா டிராவல்ஸ்’, ‘மருதமலை’, ‘வின்னர்’, ‘வேலாயுதம்’, ‘ஜில்லா’ உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றார். 2019-ம் ஆண்டு வெளியான ‘தனிமை’ படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் உடல் நலக்குறைவால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து படத்தில் நடித்துக் கொண்டிருந்த அவருக்கு சமீபத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
தற்போது உதவிக்கு யாருமே இல்லை என அவர் கதறி அழுகின்றார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் ,
கடந்த ஆறு மாதமாகவே உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. இருந்தாலும் படத்திற்காக நான் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருந்தேன்.
சமீபத்தில் பருவக் காதல் என்ற படத்தில் நடித்தேன். அந்தப் படத்தில் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்று நிஜசாக்கடையில் விழ வைத்தார்கள்.
இதனால் நான் பாதிக்கப்பட்டேன் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டது படப்பிடிப்பு தளத்திலேயே மயக்கமானேன்.
தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகின்றேன். தொடர்ந்து மூச்சுவிட சிரமப்பட்டேன். சமீபத்தில்தான் எனது இரு கிட்னியும் செயலிழந்ததாக கூறினார்கள்.
என் வாழ்க்கையில் இப்படி ஒரு துயரம் நடக்கும்னு நினைச்சுபார்க்க கூட முடியல.” என கண்ணீர் மல்க கூறினார்.
