World News
திருமணத்திற்கு சேர்த்து வைத்த பணத்தில் ஒரு ஏழைக்கு வீடு கட்டிக் கொடுத்த தம்பதி; குவியும் பாராட்டுக்கள்..!!!
இலங்கையின் மாத்தறை மாவட்டத்தில் உள்ள அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருத்தது.
அந்த இளைஞர் இலங்கை மக்கள் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் ஆயுர்வேத வைத்தியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர்களுக்கு, அங்குள்ள பிரபலமான ஹோட்டல் ஒன்றில் வைத்து மிகவும் பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து வைக்க இரண்டு குடும்பத்தினரும் தீர்மானித்திருந்தனர்.
ஆனால், ஒரு நாள் கொண்டாட்டத்திற்காக லட்சக்கணக்கில் பணத்தை செலவழிப்பதற்கு பதிலாக, அந்த பணத்தைக்கொண்டு வறுமையில் வாடும் குடும்பத்திற்கு உதவ இளம் தம்பதியர் முடிவு செய்தனர்.
அதன்படி, கணவனை இழந்த நிலையில் 3 பிள்ளைகளுடன் பாதுகாப்பற்ற வீட்டில் வசித்துவந்த பெண்மணி ஒருவருக்கு புதிய வீடு கட்டிக்கொடுக்க தீர்மானித்தனர்.
இதையடுத்து, திருமணத்திற்காக சேமித்து வைத்திருந்த ரூ. 20 லட்சத்தை கொண்டு கடந்த 2 மாதங்களாக வீடு கட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை அந்த வீடு கட்டி முடிக்கப்பட்டு, குறிப்பிட்ட குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
வீட்டை பெற்றுக்கொண்ட அந்தப் பெண்மணி, “இறைவன், மனித வடிவில் இருப்பதனை தற்போதே பார்க்கின்றேன்” என கண்ணீர் மல்க அந்தத் தம்பதிக்கு நன்றி தெரிவித்தார்.
இன்றைய காலகட்டத்தில் ஏராளமானோர், லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்திவரும் நிலையில், மாத்தறை மாவட்ட இளம் தம்பதியரின் இந்த செயல் அனைவருக்கும் முன்னுதாரணமாக அமைத்துள்ளது.
இந்தத் தம்பதிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
