Tamil News
கணவனும் மனைவியும் சேர்ந்து ரூ.400 கோடி சுருட்டிய கொடுமை; அதிர்ச்சியில் போலீசார்..!
தற்போதைய செல்போன் யுகத்தில் வேலைகள் அனைத்தும் எளிதாகி விட்டது போல, உழைப்பில்லாமல் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் மக்களிடத்தில் அதிகமாகி வருவது போலவே மோசடிகளும் அதிகமாகி வருகின்றன.
ஆன்லைன் கேம்கள் மூலம் வீட்டிலிருந்தே லட்சாதிபதி ஆகிவிடலாம் என விளம்பரங்களைத் மாற்றி மாற்றி காண்பித்து மக்களை ஏய்த்துப் பிழைக்கும் கும்பல்களும் அதிகரித்து வருகிறது.
இதே போல் தான் டிரேடிங் ஆப் மூலம் அதிகளவு சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி, 400 கோடி ரூபாய் மோசடி செய்த கோவை தம்பதியை, போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை, சுந்தராபுரம், குறிஞ்சி நகரில் வசிக்கும் பூரணசந்திரன் மகன் விமல் குமார். இவரது மனைவி ராஜேஸ்வரி.
இருவரும் இணைந்து, ‘ஆல்பா போரெக்ஸ் மார்க்கெட்ஸ்’ என்ற நிறுவனத்தை, காளப்பட்டி அசோக் நகரில் நடத்தி வந்தனர்.
‘மிஸ்டர் மணி’ என்ற ‘யூ டியூப்’ சேனலையும் நடத்தியுள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று கூட்டங்கள் நடத்துவது, நிதி முதலீடு, அன்னிய செலாவணி வர்த்தகம் தொடர்பாக வகுப்பு எடுப்பது இவர்களது வழக்கம்.
இவர்களிடம் ஏராளமானோர் அறிமுகம் ஆகியுள்ளனர்.
தன்னிடம் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 10 மாதங்கள் தொடர்ந்து 18 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என, விமல்குமார் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டார்.
முதலீட்டாளரை அறிமுகப்படுத்துபவருக்கு, 10 மாதமும் தொடர்ந்து 2,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
இதையடுத்து அவரிடம் பலரும் பணம் செலுத்தி தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர்.
அப்போது அதிக பணம் கிடைத்ததால் ஆசையில் மகிழ்ந்த விமல் குமார் தமிழகம் முழுவதும் தனது ஆக்டோபஸ் வலையை விரிக்கத் தொடங்கியுள்ளார்.
கோவை மட்டுமல்லாது திருச்சி தஞ்சாவூர் திருநெல்வேலி தூத்துக்குடி மதுரை உள்ளிட்ட பல பகுதிகளில் மாவட்டம்தோறும் அலுவலகங்களை திறந்துள்ளார்.
இதனால், அவரிடம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், 400 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.
ஆனால், முதலீடு செய்தவர்களுக்கு அசல், வட்டி, ஊக்கத்தொகை என எதையும் தராமல். 10 மாதங்களுக்கு முன், வீடு, அலுவலகத்தை காலி செய்து தலைமறைவானார்.
அவரால் பாதிக்கப்பட்ட 250 பேர், கோவை கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.
தலைமறைவாக இருந்து கொண்டே யூ டியூப் சேனல் நடத்தி இன்னும் விமல்குமார் நிதி மோசடி செய்து வருகிறார்.
அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்தனர்.
பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., பாலகுமார் தலைமையிலான போலீசார் தலைமறைவான தம்பதியை தேடி வருகின்றனர்.