Tamil News
மணக்கோலத்தில், மருத்துவமனையில் ஐசியூவில் சிகிச்சை பெற்று வரும் தந்தையிடம் ஆசிர்வாதம் வாங்கிய மகன்; நெகிழ வைக்கும் சம்பவம்..!
திருமணம் முடிந்த கையோடு மனைவியுடன் சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தந்தையிடம் வாழ்த்து பெற்ற மகனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி.
இவருடைய மகன் மணிகண்டனுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது.
நேற்று முன் தினம் மணிகண்டனின் தந்தை செல்வமணிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
உடனே திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அதே நேரத்தில் மிகுந்த மனக்கவலையுடன் தந்தை இல்லாமல் திருமணம் நடைபெறுகிறது என எண்ணி மணிகண்டன் வேதனைப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று நாச்சியார்கோவிலில் மணிகண்டன் – சுஜாலினி திருமணம் நடைபெற்றிருக்கிறது.
இதனையடுத்து தாலி கட்டி முடித்ததும் உடனடியாக தன்னுடைய மனைவியை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் மணிகண்டன்.
அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த தனது தந்தை செல்வமணியிடம் வாழ்த்து பெற்றார்.
அப்போது மணிகண்டன் தனது தந்தையின் கால்களை பிடித்துக்கொண்டு கதறி அழுதார்.
இந்த சம்பவம் அங்கிருந்த ஆஸ்பத்திரி ஊழியர்களை கண்கலங்க செய்தது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவை பார்ப்பவர்களும் கண்கலங்கி வருகின்றனர்.
பெற்றோர்களை மதியாமல் திரியும் சில பிள்ளைகளுக்கு மத்தியில் மணிகண்டன் தேடி வந்து வாழ்த்து பெற்றதற்கும் அங்கிருந்த மக்கள் வரவேற்றும் பாராட்டியிருக்கிறார்கள்.
