Tamil News
திமுக பிரமுகர் சக்கரபாணியை துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற அவரது கள்ளக்காதலி; போலீசில் அளித்த பகீர் வாக்குமூலம்..!
சென்னை ராயபுரத்தில் திமுக பிரதிநிதி ஒருவரை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த அவரது கள்ளக்காதலி போலீசில் அளித்த வாக்குமூலம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மணலி பேசின் பாலம் சாலையை சேர்ந்தவர் சக்கரபாணி வயது 65.
இவர் திமுகவின் ஏழாவது வட்ட பிரதிநிதியாக உள்ளார்.
சக்கரபாணி அப்பகுதியிலுள்ள வியாபாரிகள், மக்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மணலி பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு குடியிருந்த ஒருவருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து இருந்ததாகவும் அதனை தொடர்ந்து வாங்குவதற்காக கடந்த 10ஆம் தேதி வீட்டில் இருந்து கிளம்பி வெளியில் சென்றுள்ளார் சக்கரபாணி.
ஆனால் அவர் திரும்பவும் வீட்டிற்கு வரவில்லை என்று குடும்பத்தினர் மணலி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் நான்கு நாட்களாக சக்கரபாணி காணவில்லை என்று போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், செல்போன் சிக்னலை வைத்து ராயபுரத்தில் உள்ள க்ரேஸ் கார்டன் மூன்றாவது சந்து பகுதியில் கடைசியாக சிக்னல் இருந்ததாகத் தெரிய வந்தது.
அதன் அடிப்படையில் தமீம் பானு என்பவரது வீட்டில் சோதனை செய்தனர்.
அப்போது சக்கரபாணியின் தலையை துண்டாக வெட்டி உடலை மட்டும் கவரில் போட்டு மூடி வைத்து இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து ராயபுரம் போலீசார் உடலை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தமீன்பானு, அவருடைய தம்பி வாசிம் பாஷா ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களுக்கு உடந்தையாக இருந்த ஆட்டோ டிரைவர் டில்லி பாபு(29) தலைமறைவாக இருந்தார்.
அவரையும் நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர்.
தி.மு.க. பிரமுகர் சக்கரபாணியை கொலை செய்தது எப்படி? என போலீசாரிடம் தமீம்பானு வாக்குமூலம் அளித்து உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
நான், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மணலியில் உள்ள சக்கரபாணி வீட்டில் வாடகைக்கு குடியிருந்தேன்.
எனது கணவர் அஸ்லாம் உஜைனி, சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார்.
அவர் வாரத்தில் ஒரு நாள் மட்டும் வீட்டுக்கு வருவார். எனக்கு 14 மற்றும் 12 வயதில் 2 மகள்கள் உள்ளனர்.
சக்கரபாணி எனக்கு வட்டிக்கு பணம் கொடுத்து உதவினார். இதனால் எங்களுக்குள் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
அதன்பிறகு சக்கரபாணிக்கு தெரியாமல் கடந்த 3 வருடமாக ராயபுரம் கிரேஸ் கார்டன் 3-வது தெருவில் உள்ள ஒரு வீட்டின் 3-வது மாடிக்கு குடியேறினேன்.
இதனை சமீபத்தில் தெரிந்து கொண்ட சக்கரபாணி, என் கணவர் இல்லாத நேரத்தில் கடனை கேட்டு வருவது போல வீட்டுக்கு வருவார். அப்போது என்னுடன் உல்லாசமாக இருந்தார்.
இதுபோல் தொடர்ந்து அவர், எனது வீட்டுக்கு வந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.
இது எனக்கு பிடிக்கவில்லை. இதற்கிடையில் கீழ் வீட்டில் வசிக்கும் ஆட்டோ டிரைவர் டில்லிபாபு என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது.
நாங்கள் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தோம்.
இந்தநிலையில் கடந்த10-ந்தேதி இரவு சக்கரபாணி குடிபோதையில் எனது வீட்டுக்கு வந்தார்.
நான், எனது 2 மகள்களும் வீட்டில் இருக்கிறார்கள். எனவே வீட்டுக்குள் வரவேண்டாம் என்றேன்.
ஆனால் அதையும் மீறி வீட்டுக்குள் வந்த அவர், வலுக்கட்டாயமாக என்னை கட்டிப்பிடித்து உறவுக்கு வரும்படி அழைத்தார்.
இதில் ஆத்திரம் அடைந்த நான், அவரிடம் சண்டை போட்டேன்.
அப்போது சத்தம் கேட்டு கீழ் வீட்டில் இருந்து எனது தம்பி வாசிம் பாஷா அங்கு வந்தான்.
சக்கரபாணியை இனிமேலும் உயிருடன் விட்டு வைக்க கூடாது என்று கருதிய நாங்கள் இருவரும் சேர்ந்து சக்கரபாணியை கீழே தள்ளி, அரிவாள் மனை மற்றும் கத்தியால் வெட்டிக்கொலை செய்தோம்.
பின்னர் அடையாளம் தெரியாமல் இருக்க அவரது தலையை துண்டித்து தலையையும், குடலையும் தனித்தனியாக பிளாஸ்டிக் பையில் போட்டு கட்டினோம்.
பின்னர் அதனை டில்லி பாபு, வாசிம்பாஷா இருவரும் ஆட்டோவில் கொண்டு சென்று, குடலை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் பைபர் படகுகள் நிற்கும் பகுதியில் போட்டு விட்டனர்.
தலையை அடையாறு மலர் ஆஸ்பத்திரி அருகே கல்லைகட்டி ஆற்றில் வீசிவிட்டு வீடு திரும்பினர்.
மறுநாள் மார்க்கெட்டில் பெரிய கத்தியை வாங்கிவந்து சக்கரபாணியின் உடலை 10 துண்டுகளாக வெட்டி, தனித்தனியாக பிளாஸ்டிக் பையில் சுற்றி சாக்கு மூட்டையில் கட்டி குளியலறையில் வைத்தோம்.
துர்நாற்றம் வீசாமல் இருக்க வீடு முழுவதும் வாசனை திரவியங்களை தெளித்தோம்.
இதற்கிடையே சக்கரபாணியை போலீஸ் தேடுவது தெரிய வந்ததாலும், ஆள்நடமாட்டம் இருந்ததாலும் சக்கரபாணியின் மற்ற உடல் உறுப்புகளை அப்புறப்படுத்த முடியாமல் வீட்டிலேயே வைத்து விட்டு, இரவில் வெளியே தூக்கி கொண்டு போட்டு விடலாம் என்று காத்து இருந்தோம்.
ஆனால் அதற்குள் போலீசார் வீட்டுக்கு வந்து கண்டுபிடித்து விட்டனர் என தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
பின்னர் கைதான தமீம்பானு, வாசிம் பாஷா, டில்லிபாபு ஆகியோரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
