Viral News
ரெயிலில் பயணம் செய்த கர்ப்பிணி பெண் வலியால் துடிக்க; கடவுள் போல வந்து பிரசவம் பார்த்த மருத்துவ மாணவி..!!
ரெயிலில் பயணம் செய்த கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவ வலியால் துடித்த நிலையில், அதன் பின்னர் நடந்த சம்பவம், தற்போது இணையத்தில் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன், செகந்திராபாத் ரெயில் விசாகப்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது, அந்த ரயிலில் சுமார் 28 வயதான கர்ப்பிணி பெண் ஒருவர் பயணித்துள்ளார்.
நிறைமாத கர்ப்பிணியாக அந்த பெண் இருந்ததாக கூறப்படும் நிலையில், அம்மாவின் வீட்டிற்கு அவர் ரயிலில் சென்று கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்நிலையில், இரவு நேரம் திடீரென அந்த பெண்ணுக்கு வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
வலியில் அவர் கத்த ஆரம்பித்தார். இதனால் அந்த பெட்டியில் பயணம் செய்த பயணிகள் மத்தியில் கடும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அதே கோச்சில் இறுதியாண்டு மருத்துவம் படிக்கும் 23 வயது நிரம்பிய ஸ்வாதி ரெட்டி என்ற பெண்ணும் பயணம் செய்து கொண்டிருந்துள்ளார்.
அந்த மாணவிக்கு இந்த விபரம் தெரிய வந்ததும் உடனே அவர் அங்கே சென்று அந்த கர்ப்பிணி பெண்ணை பரிசோதித்து பார்த்துள்ளார்.
சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்க போகிறது என்பதையும் அந்த மாணவி தெரிந்து கொண்டார்.
ஆனால், சிகிச்சை அளிக்க ஸ்வாதி தயாராக இருந்த போதிலும், அவர் சிறிய பெண் போல இருந்ததால் முதலில் அந்த கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை.
பின்னர் தான் மருத்துவ மாணவி என்பதையும் பிரசவம் பார்க்க தெரியும் என்றும் ஸ்வாதி கூறி உள்ளார்.
இதன் பின்னர், அந்த கர்ப்பிணியின் குடும்பத்தினர் ஓரளவுக்கு சம்மதம் சொன்ன நிலையில், அந்த இடமே பிரசவம் பார்க்கும் இடம் போல மாறி, துணி அனைத்தும் கட்டப்பட்டு பிரசவம் பார்க்க ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதிகாலை 3:30 மணியளவில் அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு, சுமார் 5:30 மணியளவில் அந்த பெண்ணுக்கு குழந்தையும் பிறந்துள்ளது.
அந்த பெண்ணும், பிறந்த குழந்தையும் நல்ல நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது பற்றி பேசும் மருத்துவ மாணவி ஸ்வாதி கூறுகையில்,
“மருத்துவமனையில் எங்கள் மருத்துவர்களுடன் இணைந்து நான் பிரசவம் பார்க்க துணையாக இருந்துள்ளேன்.
ஆனால், தனியாக பிரசவம் பார்ப்பது இதுவே முதல் முறை. இதனால், எனக்கு முதலில் சற்று பதற்றமாக இருந்தது.
அதே வேளையில், இதில் எனக்கு நிறைய பயிற்சி இருந்ததால் தைரியத்துடன் இதனை செய்தேன்.
மருத்துவ கருவிகள் எதுவும் இல்லாததால், நேரம் அதிகம் எடுத்துக் கொண்டது. குழந்தை நல்லபடியாக வெளியே வந்த பிறகு தான் நிம்மதி அடைந்தேன்” என கூறினார்.
ரயிலில் கர்ப்பிணி பெண் பிரசவ வலியால் துடித்த நிலையில், தெய்வம் போல வந்து காப்பாற்றிய மருத்துவ மாணவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
