Tamil News
12 ஆண்டுகளாக கார் மூலம் 91 நாடுகளை சுற்றி வந்த தம்பதி; இந்தியா வந்ததும் ஏற்பட்ட கஷ்டம்..!!
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஒரு இளம் ஜோடி (German tour couple) கடந்த 12 ஆண்டுகளாக 91 நாடுகளை சுற்றி வந்துள்ளனர்.
இந்தப் பயணத்திற்கு அவர்கள் பயன்படுத்தியது ஒரு கார் மட்டுமே என்பதுதான் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரைச் சேர்ந்தவர் தோல்பன். 39 வயதான இவர் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும் எளிமையான வாழ்க்கை மற்றும் வித்தியாசமான ஊர்களைப் பார்ப்பதில் ஆர்வம் கொண்டிருக்கிறார்.
இவரைப் போலவே எழுத்தாளரான இவருடைய மனைவி மிகியும் (36) பல வித்தியாசமான கலாச்சாரங்களையும் இயற்கை கொஞ்சும் இடங்களையும் நேரடியாகப் பார்ப்பதில் ஆர்வம் கொண்டவர்.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்
இந்தத் தம்பதிகள் உலகை சுற்றுவது என முடிவெடுத்து கடந்த 12 ஆண்டுகளாக இதுவரை 91 நாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
தற்போது துபாயில் இருந்து கப்பல் மூலம் மும்பை வந்தனர்.
பின்னர், அங்கிருந்து கர்நாடகா, கேரளா வழியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் வந்தனர்.
அவர்கள் மாமல்லபுரம் கடற்கரை கோவில் நுழைவு வாயிலில் தங்களின் வாகனத்தை நிறுத்திவிட்டு சுற்றுலா சென்றபோது, அங்கு வந்த சுற்றுலா பயணிகள் சொகுசு வாகனத்தை சூழ்ந்து கொண்டு மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
இந்த நவீன சொகுசு வாகனம் குளிர் சாதன வசதியுடன் கூடிய படுக்கை வசதி, சமையல் அறை, குளியலறை உள்ளிட்டவற்றைக் கொண்டது.
மேலும், மலை பிரதேசம், கரடு முரடான பாதைகளில் பயணிக்கும் வகையில் சிறப்பம்சம் பொருந்திய டயர்கள் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.
காரணம் ஊர் சுற்றுவது என முடிவெடுத்த இந்தத் தம்பதி பென்ஸ் வகையைச் சேர்ந்த ஒரு காரில் சோலாரை பொருத்தி அதன் எரிபொருள் டேங்கை 1,000 லிட்டர் நிரப்பும் அளவிற்கு பெரிதாக வைத்துள்ளனர்.
அதோடு எங்காவது வாகனம் பழுதாகி நின்றுவிட்டால் மெக்கானிக்கல் என்ஜினியரான தோல்பன் உடனே அதை சரிசெய்துவிடுகிறார்.
இப்படித்தான் தோல்பனும் அவருடைய மனைவி மிகி தங்களது 2 குழந்தைகளுடன் கடந்த 12 ஆண்டுகளில் 91 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளனர்.
வாகனத்தை தோல்பன் ஓட்ட, மிகி சமையல் வேலையைப் பார்த்துக்கொள்ள இந்த ஜோடி இதுவரை ஆஸ்திரியா, இத்தாலி, குரோசியா, ஆல்போனியா, கிரீஸ், இஸ்ரேல், இங்கிலாந்து, நார்வே, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, இலங்கை சுவிட்சர்லாந்து, ஜோர்டன், தென் அரேபியா, ஓமன், எமிரேட்ஸ், துபாய் எனப் பல நாடுகளுக்கு பயணம் செய்ததாகக் கூறியுள்ளனர்.
மேலும் தற்போது பணப் பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து இந்தியாவில் இருந்து ஜெர்மனிக்குச் செல்லும் அவர்கள் நன்றாக சம்பாதித்துக் கொண்டு மீண்டும் தங்களது பயணத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
