Tamil News
கால்கள் செயலிழந்த காதலனை பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த பெண்; மணமகனை அடித்து உதைத்து மகளை இழுத்துச் சென்ற பெற்றோர்..!
விபத்தில் சிக்கி கால்கள் செயலிழந்த காதலனை பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த பெண்ணை அவரது உறவினர்கள் பிரித்துச் சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த கேசவனேரியை சேர்ந்தவர் பிரகாஷ் (27).
இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவரும் வள்ளியம்மாள்புரத்தை சேர்ந்த திவ்யா (24) என்பவரும் 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்கள் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்த நிலையில் அவர்களும் இவர்களின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியிருந்தனர்.
இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வேலை நிமித்தமாக பிரகாஷ் தனது மோட்டார் சைக்கிளில் வெளியூர் சென்ற போது ஒரு விபத்தில் சிக்கினார்.
இதில் அவரது முதுகு தண்டுவடத்தில் கடுமையான காயம் ஏற்பட்டது. இதன் விளைவாக, அவரது இரண்டு கால்களும் செயலிழந்தன.
இந்த விஷயம் திவ்யாவின் பெற்றோருக்கு தெரியவரவே, பிரகாஷை திருமணம் செய்யக்கூடாது என அவர்கள் கூறத் தொடங்கினர்.
கால்கள் இல்லாத நபரை திருமணம் செய்தால் எதிர்காலம் வீணாகிவிடும் என அவர்கள் கூறினர்.
ஆனால், திவ்யா தனது காதலில் உறுதியாக இருந்தார்.
நன்றாக இருந்த போது காதலித்துவிட்டு, இப்போது ஊனமடைந்த பிறகு அவரை கைவிட்டு செல்வது நியாயம் அல்ல என்பதில் தெளிவாக இருந்தார்.
எனினும், திவ்யாவின் பெற்றோர் அவருக்கு அவசர அவசரமாக மாப்பிள்ளை தேட தொடங்கினர்.
இதனால் பிரகாஷை உடனடியாக கரம்பிடிக்க முடிவு செய்தார் திவ்யா. ஆனால் பிரகாஷால் வீட்டை விட்டு வெளியே வர முடியாததால் அவர்கள் திருமணம் செய்து கொள்வதில் தாமதம் ஏற்பட்டது.
அதன்படி, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த 20-ம் தேதி பிரகாஷின் வீட்டுக்கு சென்ற திவ்யா, அங்கு வைத்தே அவரை திருமணம் செய்து கொண்டார்.
மகளுக்கு திருமணம் நடந்ததை கேள்விப்பட்ட திவ்யாவின் பெற்றோர், திருமணம் முடிந்து எட்டு நாட்கள் கழித்து பிரகாஷின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
அது மட்டுமில்லாமல், பிரகாஷை தாக்கி வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி பின்னர் அங்கிருந்து திவ்யாவை இழுத்துக் கொண்டு சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
திவ்யாவின் உறவினர்கள் தாக்கியதில் காயமடைந்த பிரகாஷை, அவரது பெற்றோர் மீட்டு வள்ளியூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில், தனது மனைவியை மீட்டு தருமாறு பிரகாஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
