Tamil News
மருமகளையும், பேரக் குழந்தையையும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த தாத்தா; பேரன் உயிரிழப்பு; மருமகள் உயிர் ஊசல்…!!
தேனி மாவட்டம் கம்பம் அருகே வரதட்சணை கொடுமையால் மருமகள் மற்றும் பேரன் மீது தாத்தா மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததில் பேரன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், கம்பம் அருகே நாராயணன் தேவன்பட்டியைச் சேர்ந்த பெரியகருப்பன், வயது60.
இவரது மகன் அருண்பாண்டி, 23. இவர் திராட்சை தோட்ட வேலைக்கு செல்பவர்.
இதே ஊரைச் சேர்ந்த சுகப்ரியா, 22, என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.
சுகப்ரியா ‘இல்லம் தேடி மருத்துவம்’ திட்டத்தில் சில நாட்கள் நர்சாக பணி செய்தார். இவர்களது மகன் யோகேஷ், 2.
சுகப்ரியாவிடம் வரதட்சனை கேட்டு மாமனார் அடிக்கடி சண்டையிட்டார்.
நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த பெரியகருப்பன், மருமகள் சுகப்பிரியாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது மருமகள் சுகப்பிரியா, பேரக்குழந்தை யோகேஷ் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து விடுவேன் என மிரட்டியுள்ளார்
ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.
இதனால் ஆத்திரமடைந்த பெரியகருப்பன் மண்ணெண்ணெய் எடுத்து மருமகள், பேரன் மீதும் ஊற்றி தீயைப் பற்ற வைத்துள்ளார்.
இருவர் மீதும் தீ மளமளவென பரவியது. இருவரும் கூச்சல் போட்டனர்.
தாய், மகனின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் தீயில் எரிந்து கொண்டிருந்த இருவரையும் காப்பாற்ற முயற்சித்தனர்.
ஆனால், குழந்தை யோகேஷ் பரிதாபமாக இறந்து போனது.
கவலைக்கிடமான நிலையில் பலத்த தீக்காயங்களுடன், தேனி அரசு மருத்துவமனையில், சுகப்ரியா சிகிச்சை பெற்று வருகிறார்.
தேனி மாஜிஸ்திரேட்டிடம் சுகப்ரியா அளித்த வாக்குமூலத்தில், என்னை வரதட்சனை வாங்கி வரும்படி மாமனார் பெரியகருப்பன், மாமியார் ஒச்சம்மாள், நாத்தனார் கனிமொழி, கணவன் அருண்பாண்டி கொடுமைப்படுத்தினர் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் நால்வர் மீதும் வழக்கு பதிவு செய்து, பெரியகருப்பனை கைது செய்தனர்.
இச்சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது
