Cinema
விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய பிரபல காமெடி நடிகர்; வலைவீசி தேடும் போலீசார்..!!
சென்னையில் காரை விபத்திற்குள்ளாக்கிய நகைச்சுவை நடிகர் கணேஷ்கர் (actor ganeshkar) போலீசாருக்கு பயந்து தப்பியோடி தலைமறைவாக உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் கணேஷ்கர்.
சிவா, கோவில், படிக்காதவன், அரண்மனை, மோகினி உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கணேஷ்கர்.
இவர் நகைச்சுவை நடிகை ஆர்த்தியின் கணவர் ஆவார்.
இவர்கள் வளசரவாக்கத்தில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் கணேஷ்கர் தனது காரில் நேற்று பட்டினம்பாக்கத்தில் உள்ள லூப் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவரது கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கே இருந்த சாலைத்தடுப்பில் பயங்கரமாக மோதியது.
இதில், காரின் முன்பக்கம் மிக கடுமையாக சேதமடைந்தது. கார் சாலைத்தடுப்பில் மோதியதில் பயங்கர சத்தம் ஏற்பட்டது.
பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்தவரும் கட்டுப்பாட்டை இழந்து கணேஷ்கரின் காரில் மோதி கீழே விழுந்து காயமடைந்துள்ளார்.
சத்தம் கேட்டு மக்கள் திரண்டதும் கணேஷ்கர் பயத்தில் காரை அங்கேயே விட்டு விட்டு தப்பி சென்றதாகக் கூறப்படுகிறது.
பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காரை பறிமுதல் செய்தனர். பின்னர்.
விபத்தை ஏற்படுத்திய நடிகர் கணேஷ்கரை அருகில் உள்ள மருத்துவமனையில் தேடினர்.
ஆனால், அவர் அருகில் இருந்த எந்த மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதியாகவில்லை என்று தெரியவந்தது.
பின்னர் கணேஷ்கரின் வீட்டிற்கு சென்று விசாரித்த போது, வீட்டிற்கு வரவில்லை என அவரது மனைவி ஆர்த்தி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
நடிகர் கணேஷ்கரை பிடித்தபிறகுதான் அவர் மதுபோதையில் சென்று காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தினாரா? அல்லது அதிவேகமாக சென்று காரை விபத்திற்குள்ளாக்கினாரா? என்பது தெரியவரும்.
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகர் கணேஷ்கரை தேடி வருகின்றனர்.
