Tamil News
புல்லட் வாங்க ஆசைப்பட்டு தமது மனைவியின் நகைகளை திருடிய கணவர்..!
சொந்த வீட்டிலேயே திருடிய நகையை விற்று ஆன்லைன் ரம்மி,மெரினா கடற்கரை, என உல்லாசமாக செலவழித்து சுற்றித்திரிந்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை எழும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஷீத்.
இவர் துபாயில் ஏ.சி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் சென்னை வந்த அவருக்கு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி மாலை அப்துல் ரஷீத் தனது மனைவியுடன் எழும்பூர் காவல் நிலையத்தில் தனது வீட்டின் கதவு மற்றும் பீரோவை உடைத்து மனைவியின் 17 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அப்துல் ரஷீத் அவரது மனைவி வருவதற்கு முன் வீட்டிற்குள் சென்று வருவது பதிவாகியிருந்தது தெரிய வந்தது.
இதனால் சந்தேகமடைந்து அவரை விசாரித்த போது, அப்துல் ரஷீதே தனது மனைவியின் நகையைத் திருடி விற்றுவிட்டு கொள்ளை நாடகம் ஆடியது அம்பலமானது.
போலீசாரின் விசாரணையில், தமது நண்பர்கள் அனைவரும் புல்லட் பைக் வைத்திருப்பதால் தானும் புல்லட் பைக் வாங்க வேண்டும் என நினைத்து நகையை திருடியதாக அப்துல் ரஷீத் போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
திருடிய நகைகளை தனது உறவினரான முகமது சாய் என்பவரிடம் கொடுத்து ரூபாய் 2 லட்சத்து 80 ஆயிரத்திற்கு நகையை விற்பனை செய்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ரூபாய் 2 லட்சத்து 80 ஆயிரம் பணம் கையில் வந்தவுடன் அதனை உல்லாசமாக செலவழித்து வந்துள்ளார்.
மேலும், அந்த பணத்தை கொண்டு ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்ததும் தெரிய வந்தது.
அப்துல் ரஷீத் மற்றும் அவரது உறவினர் முகம்மது சாயி ஆகிய இருவரையும் எழும்பூர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
