Tamil News
கோயில் கும்பாபிஷேகத்திற்கு சீர்வரிசை பொருட்கள் கொண்டு சென்ற இஸ்லாமியர்கள்..!
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் உள்ள மங்களநாயகி அம்பாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கு சீர்வரிசை எடுத்து சென்று இஸ்லாமியர்கள் அசத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே நெடுவாசல் கிராமத்தில் பழமை வாய்ந்த மங்களநாயகி அம்பாள் உடனுறை பாலாண்ட ஈஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது.
இக்கோவிலில் நாடியம்மன் உள்ளிட்ட பரிவார சன்னதிகளும் உள்ளன.
இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
இந்த விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை-தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களில் உள்ள பல்வேறு கிராமமக்கள் நாட்டியக் குதிரை ஆட்டங்கள், செண்டை மேளங்கள் முழங்க கண்கவர் வாணவேடிக்கையுடன் நெடுவாசல் கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சீர் கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக ஆவணம் மற்றும் காசிம்புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் பூ, பழம், இனிப்புகள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தட்டுகளை கையில் ஏந்தியபடி நெடுவாசல் கோவிலுக்கு சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
அவர்களை நெடுவாசல் கிராமமக்கள் மற்றும் விழாக்குழுவினர் சார்பில் மாலை அணிவித்து வரவேற்று இஸ்லாமியர்களை கோவிலுக்குள் அழைத்து சென்றனர்.
பின்னர் இஸ்லாமியர்கள் கொண்டு வந்த சீர்வரிசை பொருட்கள் மற்றும் பணத்தை விழாக்குழுவினர் பெற்றுக் கொண்டு இஸ்லாமியர்களுக்கு தங்கள் நன்றியை தெரிவித்தனர்.
