Uncategorized
“இது எனக்கு இரண்டாவது பிறவி; சாகும் வரை பாம்பு பிடித்து கொண்டே இருப்பேன்” – சிகிச்சைக்கு பின் வாவா சுரேஷ் பேட்டி..!!
பாம்பு பிடிக்கையில், துரதிர்ஷ்டவசமாக நல்லபாம்பு கடித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோட்டயம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாவா சுரேஷ் (Vava suresh) தற்போது உடல்நலம் தேறிய நிலையில் வீடு திரும்பினார்.
கோட்டயம் அருகே குரிச்சியில் ஒரு வீட்டிற்குள் நல்ல பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதாகவும், அதனை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைக்கக்கோரி பிரபல பாம்பு பிடி மன்னன் வாவா சுரேசுக்கு போன் தகவல் வந்தது.
இதை தொடர்ந்து அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். பின்னர், குறிப்பிட்ட அந்த வீட்டில் பதுங்கி இருந்த நல்ல பாம்பை பிடித்து சாக்கில் போட்டு கட்ட முயன்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த பாம்பு வாவா சுரேசின் வலது காலில் கடித்தது.
இதைகண்டு அங்கு நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையே சிறிது நேரத்தில் வாவா சுரேஷ் மயக்கி விழுந்தார்.
அதைதொடர்ந்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர், அவரை மேல்சிகிச்சைக்காக கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவசர சிகிச்சை பிரிவில் இருந்த வாவா சுரேஷ் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து நேற்று வீடு திரும்பினார்.
அவரை அப்பகுதி மக்கள் திரண்டு வரவேற்று நலம் விசாரித்தனர்.
அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். இது எனக்கு மறுபிறவி.
இனி பாம்புகளை பிடிக்கும் போது கூடுதல் ஜாக்கிரதையாக இருப்பேன். ஆனால் நான் இறக்கும் வரை பாம்புகளை பிடித்துக் கொண்டே இருப்பேன் என்றார்.
வாவா சுரேஷுக்கு 65 பாட்டில்கள் விஷமுறிவு மருந்துகள் கொடுக்கப்பட்டது. அவரது உடலில் பாம்பின் விஷம் நிறைய பரவி இருந்ததால் நிறைய விஷ முறிவு மருந்துகள் கொடுக்கப்பட்டன.
பொதுவாக பாம்பு கடிக்கு அதிகபட்சம் 25 பாட்டில்கள்தான் கொடுக்கப்படும். ஆனால் பாம்பு கடியால் பாதித்தவருக்கு 65 பாட்டில்களை முதல்முறையாக மருத்துவமனை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
