Viral News
“இப்போது வாடகைக்கு தனிவீடு எடுத்து நாங்கள் சுதந்திரமாக வாழ்கிறோம்” – கேரள லெஸ்பியன் ஜோடி மகிழ்ச்சியுடன் பேட்டி..!
கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகே உள்ள ஆலுவா பகுதியை சேர்ந்தவர் ஆதிலா நஸ்ரின் (22).
சில வருடங்களுக்கு முன் இவர் படிப்பதற்காக சவுதி அரேபியாவுக்கு சென்றார்.
அங்கு, கோழிக்கோடு மாவட்டம், தாமரைசேரி என்ற இடத்தை சேர்ந்த பாத்திமா நூரா (23) என்ற இளம்பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் இருவரும் மிகவும் நெருக்கமாகினர். காதல் மலர்ந்தது. கேரளா திரும்பிய பிறகும் இவர்களிடையே தொடர்பு மேலும் அதிகரித்தது.
சில மாதங்களுக்கு முன் ஆதிலா நஸ்ரின், பாத்திமாவுடன் சேர்ந்து வாழ்வதற்காக கோழிக்கோடு சென்றார்.
கோழிக்கோட்டில் உள்ள வனஜா கலெக்டிவ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் தஞ்சம் புகுந்தனர்.
இது (லெஸ்பியன்) ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஆதரவளிக்கும் இடமாகும்.
இது குறித்து அறிந்த இருவரின் குடும்பத்தினரும் கோழிக்கோடு போலீசில் புகார் அளித்தனர்.
பின்னர், போலீசாரின் தலையீட்டால் இருவரையும் அவர்களின் பெற்றோர் பிரித்து வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
நுாராவை பிரிந்து வாழ முடியாமல் தவித்த ஆதிலா, கேரள உயர் நீதிமன்றத்தில் நேற்று ஒரு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
அதில், ‘நானும் பாத்திமா நூராவும் சேர்ந்து வாழ தீர்மானித்து உள்ளோம்.
ஆனால், தற்போது அவரை காணவில்லை. அவரை கண்டுபிடித்து என்னுடன் சேர்ந்து வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் ஆதிலா நஸ்ரின், பாத்திமா நூரா இருவரும் சேர்ந்து வாழ கடந்த மே மாதம் 31-ம் தேதி அனுமதி வழங்கியது.
கடந்த 3 மாதங்களாக ஆதிலா நஸ்ரினும், பாத்திமா நூராவும் சென்னையில் வீட்டை வாடகைக்கு எடுத்து சேர்ந்து வசித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஆதிலா நஸ்ரின், பாத்திமா நூரா இருவரும் கூறுகையில்,
‘‘எங்கள் உணர்வைப் புரியாமல் பெற்றோர் உடலால் காயப்படுத்தினர்.
நானும், என் தோழியும் எங்கள் கருத்தில் உறுதியாக இருந்து, நீதிமன்ற உத்தரவுப்பெற்று சேர்ந்து வாழ்ந்து வருகிறோம்.
இப்போது யாருடைய தலையீடும் இல்லாமல், ஒரு பறவையைப் போல் சுதந்திரமாக வாழ்கிறோம்.
நாங்கள் சென்னையில் வாடகைக்கு பிளாட் தேடிய போதும் கூட எங்கள் அடையாளத்தை மறைக்கவில்லை என கூறினர்.
