Tamil News
மகளின் காதல் திருமணத்திற்கு செல்லாத தாய்; கோபத்தில் தந்தை செய்த விபரீத செயல்..!
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த புதூர்செக்கடி, ஜம்போடை கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது48).
இவரது மனைவி ராணி (43). இவர்களுக்கு ராஜபாண்டி (24), சிவா (22) என்ற 2 மகன்களும், பரணி (21) என்ற மகளும் உள்ளனர்.
ராணி வெளிநாட்டில் தங்கி வீட்டு வேலை செய்து பணம் சம்பாதித்து வந்தார்.
கடந்த 2 மாதத்துக்கு முன்பு பழனியின் தாய் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார்.
இதற்காக ராணி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது மாமியார் மரணமடைந்த நிலையில் சொந்த ஊர் திரும்பியிருக்கிறார்.
அதன்பின் சொந்த ஊரிலேயே வசித்தும் வந்திருக்கிறார்.
இந்நிலையில் பழனி – ராணி தம்பதியின் மகள் புதூரை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்திருக்கிறார்.
இதில் ராணிக்கு விருப்பமில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்னர் அதே கிராமத்தில் ராணியின் மகளுக்கும் அவரது காதலருக்கும் திருமணம் நடந்திருக்கிறது.
இதில் இருவீட்டார் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்ட நிலையில், ராணி தனது மகளது திருமண விழாவில் பங்கேற்க செல்லவில்லை.
இதனிடையே தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டியில் வசித்துவந்த ராணியின் சகோதரி வீட்டில் விசேஷம் நடைபெற்றிருக்கிறது.
இதில் கலந்துகொள்ள கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வீட்டுக்கு திரும்பியிருக்கிறார் ராணி.
இதனை கண்ட பழனி மகளின் திருமணத்துக்கு வராமல் சகோதரி வீட்டு விழாவிற்கு செல்வது குறித்து ராணியிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இது ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறவே, பழனி தனது மனைவியை கடுமையாக தாக்கியதாக சொல்லப்படுகிறது.
இதனால் மயங்கிவிழுந்த ராணி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
அப்போது வீட்டுக்கு வந்த தம்பதியின் மகன் தனது தாய் மரணமடைந்ததை அறிந்து கதறி அழுதிருக்கிறார்.
சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் நடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்ததுடன் காவல்துறைக்கும் தகவல் கொடுத்திருக்கின்றனர்.
இதனையடுத்து பழனி அங்கிருந்து தப்பிச்சென்று தலைமறைவாகிவிட்டார்.
இதனிடையே சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த காவல்துறையினர் ராணியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் பக்கத்து கிராமத்தில் தனது அக்கா வீட்டில் பதுங்கியிருந்த பழனியை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
