Tamil News
மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல்; திருமணம் நடத்தி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!
சென்னை கீழ்ப்பாக்கம் அரசுமனநல காப்பகத்தில் (மருத்துவமனை) சிகிச்சை பெற்று குணமடைந்த 42 வயதான மகேந்திரனும் 36 வயதான தீபாவும், காப்பகம் வாயிலில் உள்ள கோயிலில் நேற்று திருமணம் செய்து கொண்டனர்.
காப்பகத்தின் இயக்குநர் மருத்துவர் பூர்ண சந்திரிகா தலைமையில் நடைபெற்ற திருமணத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.
மருத்துவர்கள்,செவிலியர்கள், ஊழியர்கள், சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் பலர் பங்கேற்றனர்.
பின்னர், காப்பக வளாகத்தில் நடந்த திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் இருவரும் தலா ரூ.15 ஆயிரம் ஊதியத்தில் மனநல காப்பகத்தில் வார்டு மேலாளராக பணிபுரிவதற்கான பணிநியமன ஆணையை வழங்கினார்.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், வில்லிவாக்கம் தொகுதி எம்எல்ஏ வெற்றியழகன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
சென்னையை சேர்ந்த மகேந்திரன் எம்.பில். படித்துள்ளார். நல்லவசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தீபா எம்.ஏ., பிஎட். படித்துள்ளார்.
இவர் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். 2 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பப் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் மனதளவில் பாதிக்கப்பட்ட இருவரும், கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் உள் நோயாளியாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் குணமடைந்த மகேந்திரன் காப்பகத்தில் பராமரிப்பாளராகவும், தீபா அதே காப்பகத்தில் நடத்தப்படும் பேக்கரி ஒன்றிலும் பணியாற்றி வருகின்றனர்.
தந்தையை இழந்த இருவரும், குணமடைந்த பின்னர் ஒருவரையொருவர் சந்திக்கத் தொடங்கினர். இந்த சந்திப்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
தங்களுடைய காதலை சக ஊழியர்களிடமும், காப்பகத்தின் இயக்குநர் மருத்துவர் பூர்ண சந்திரிகாவிடமும் தெரிவித்துள்ளார்.
முதலில் எதிர்ப்பு தெரிவித்த அவர், பின்னர் அவர்களது கருத்துகளை ஏற்று கொண்டு, திருமணத்துக்கு சம்மதித்தார்.
இதையடுத்து மகேந்திரன்-தீபா ஆகியோரது திருமணம் நேற்று காலை மருத்துவமனை வளாகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.
பின்னர் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ‘இதுவரை நான் கலந்து கொண்ட திருமணங்களில் இந்த திருமணம், எனக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
திருமணமான தம்பதியர் பட்டதாரிகள். அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும் என வெற்றியழகன் எம்எல்ஏ வலியுறுத்தினார்.
அதனடிப்படையில் இந்த மருத்துவமனையிலேயே வார்டு மேற்பார்வையாளராக பணி நியமன ஆணை வழங்குகிறேன்.
கீழ்பாக்கம் மனநல காப்பக மருத்துவமனையில் ₹40 கோடி மதிப்பில் கட்டமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
இங்கு காலியாக உள்ள இடங்களில் பேக்கரி, நெல் பயிரிடும் பணிகள் நடக்கிறது’ என்றார்.
இதையடுத்து மகேந்திரன்-தீபா ஆகியோர் மருத்துவமனையிலேயே பணியாற்றும் வகையில், பணி நியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினார்
