Tamil News
கணவர் இறந்ததால், தனது மகளை வளர்க்கவும், பாதுகாப்பு கருதியும் 30 ஆண்டுகளாக ஆண் வேடமிட்டு வாழும் தாயின் சோக கதை…!
தனது கணவர் இறந்த நிலையில் தனது மகளை வளர்ப்பதற்காகவும், ஆண்களின் பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாத்து கொள்ளவும் கடந்த 30 ஆண்டுகளாக ஆண் வேடமிட்டு வாழும் ஒரு தாயின் வாழ்க்கை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், முடிவைத்தானேந்தல் பகுதியை சேர்ந்தவர் சிவா பிள்ளை.
இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் சொக்கலிங்கபுரம் பகுதியை சேர்ந்த பேச்சியம்மாள் என்பவரை திருமணம் செய்தார்.
திருமணம் முடிந்து குழந்தை பிறந்து 15-வது நாளில் சிவா பிள்ளை எதிர்பாராத விதமாக இறந்து விட்டார்.
இதனால் நிலை குலைந்து போன பேச்சியம்மாள் செய்வதறியாது திகைத்தார்.
கைக்குழந்தையை கையில் எடுத்து கொண்டு எப்போதும் வென்றான் அருகில் உள்ள காட்டுநாயக்கன் பட்டிக்கு குடியேறியுள்ளார்.
அங்கு சிறு சிறு வேலைகள் பார்த்து வந்த பேச்சியம்மாள்க்கு பாலியல் ரீதியாக ஆண்களிடமிருந்து அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
மேலும், தனது குழந்தைக்கு அப்பா இல்லை என்ற கவலை இருக்க கூடாது என நினைத்துள்ளார்.
இதனால் ஆண் போல் முடிவெட்டி, ஆண் போல ஆடைகளும் அணிய தொடங்கியுள்ளார்.
இது அவரை ஆண்களிடமிருந்து பாலியல் சீண்டல்கள் ஏற்படாமல் காத்துள்ளது. மேலும் தனது பெயரையும் முத்து என மாற்றினார்.
பின்னர், வறுமையின் காரணமாக பல ஊர்களுக்கு சென்று தொழில் செய்து வந்துள்ளார்.
அப்போது பேச்சியம்மாள் தன்னை பெண்ணாக காட்டிகொள்ளாமல், ஆணாகவே வலம் வந்துள்ளார்.
அதனால் பலரும் அவரை ‘அண்ணாச்சி’ என அழைத்து வந்துள்ளார்.
அதன்பிறகு, தூத்துக்குடிக்கு வந்த முத்து, ஊர் மக்களுக்கு அடையாளம் தெரியாத அளவுக்கு அளவில் வேட்டி, சட்டை உடுத்தி, கிராப் தலையுடன் ஆணாகவே காட்சியளித்துள்ளார்.
30 ஆண்டுகளாக இதே தோற்றத்துடன் தான் முத்து இருக்கிறார்.
டீக்கடை, பரோட்டா கடை வரை வேலை பார்த்து வந்ததால் மாஸ்டர் என்றே அடையாளம் காணப்படும் அவரை ‘முத்து மாஸ்டர்’ என்றே ஊர்மக்கள் அழைக்கின்றனர்.
30 ஆண்டுகளுக்கு மேலாக இவரின் பெண்ணிற்கு தாய்க்கு தாயாக, தந்தைக்கு தந்தையாக வாழ்ந்து வருகிறார்.
மகளுக்கு கஷ்டப்பட்டு திருமணம் கட்டி கொடுத்து பாட்டியாக வலம் வருகிறார்.
கணவர் இறந்ததும் குழந்தையை வளர்ப்பதற்காக ஆண் வேடமிட்டு பெண் ஒருவர் வாழ்ந்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கணவர் இறந்த போது இறப்பு சான்றிதழ் வாங்கவில்லை.
மேலும் ஆதார் அட்டையிலும் முத்து என்ற ஆண் பெயரே இருப்பதால் விதவை நிதி உதவி, முதியோர் ஓய்வூதியத்தொகை எதுவும் இவருக்கு கிடைக்கவில்லை.
தற்போது வயதாகிவிட்டதால், முன்பு போல் வேலை செய்ய முடியவில்லை என்றும் இந்த ஓய்வூதியத்தொகை கிடைத்தால் உதவியாக இருக்கும் என்றும் முத்து மாஸ்டர் என்ற பேச்சியம்மாள் அரசுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார்.
