Tamil News
திருமணம் முடிந்த 5-வது நாளில் விருந்துக்கு வந்த மருமகனை வெட்டி சாய்த்த மாமனார்..!
திருத்துறைப்பூண்டி அருகே கறி விருந்துக்குச் சென்ற மருமகனை, வெட்டிக் கொலை செய்த மாமனாரின் கொடூரச் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள சிங்களாந்தி மங்களநாயகிபுரம் பகுதியைச் சேர்ந்த முத்தரசன் (27).
இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகள் அரவிந்தியா (27) என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 13-ம் தேதி பெற்றோர்கள் சம்மதத்துடன் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது.
திருமணம் முடிந்து 5 நாட்கள் ஆன நிலையில் மகள் மற்றும் மருமகனுக்கு மாமனார் ரவிச்சந்திரன் விருந்து வைத்துள்ளார்.
அப்போது முத்தரசன் மதுபோதையில் தனது மனைவி அரவிந்தியாவுடன் தகராறில் ஈடுபட்டு அவரை அடித்ததாக கூறப்படுகிறது.
இதனால், அதிர்ச்சி அடைந்த பெண்ணின் தந்தை இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளார்.
ஆனால், குடிபோதையில் இருந்த முத்தரசன் அதனைக் கேட்கும் நிலையில் இல்லை.
இதன் காரணமாக மாமனாருக்கும், மருமகனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த மாமனார் அரிவாளை எடுத்து மருமகளை வெட்டியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த மருமகன் முத்தரசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மாமனார் ரவிச்சந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
