Uncategorized
திருமணம் முடிந்து கனவுகளுடன் கணவர் வீட்டிற்கு சென்ற புதுமணப்பெண்; கழிவறை இல்லை என தெரிந்ததும் விரக்தியில் எடுத்த விபரீத முடிவு..!
கணவர் வீட்டில் கழிவறை இல்லாததால் புதுப்பெண் ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் அரிசிபெரியாங்குப்பத்தை சேர்ந்தவர் ரங்கநாயுடு.
இவரது மகள் ரம்யா (வயது 27). எம்.எஸ்சி. படித்துள்ள இவர் கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இவரும் கடலூர் புதுநகரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.
கடந்த மாதம் 6-ம் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் தனது காதலியை திருமணம் செய்தார் கார்த்திகேயன்
திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு சென்ற பிறகு தான், அங்கு கழிவறை இல்லை என்பது புது மணப்பெண் ரம்யாவுக்கு தெரிய வந்துள்ளது.
இதனால் ரம்யா தனது தாய் வீட்டுக்கு சென்று வசித்து வந்தார்.
அப்போது வேறு வீடு பார்த்து அழைத்து செல்வதாக கூறிய கார்த்திகேயன், வேறு வீடு பார்க்கவில்லை என தெரிகிறது.
இதுதொடர்பாக சம்பவத்தன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தன்னை உருகி உருகி காதலித்தவனால் தனக்காக ஒரு கழிவறை கூட கட்ட முடியவில்லையே என மன வேதனை அடைந்துள்ளார் ரம்யா.
கழிவறை இல்லாத கணவன் வீட்டில் இனி எப்படி வாழ்வது என விரக்தி அடைந்த ரம்யா, வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டுக் கொண்டார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய் மஞ்சுளா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ரம்யாவை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, ரம்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து மஞ்சுளா, திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ரம்யாவுக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆவதால், அவரது சாவுக்கான காரணம் குறித்து கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசும், விசாரித்து வருகிறார்.
கழிவறை வசதி இல்லாத காரணத்தினால் புதுமணப்பெண் ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.