Tamil News
வீட்டை விட்டு ஓடிப்போன திருநங்கையாக மாறிய மகனை அழைத்து வந்து பூப்புனித நீராட்டு விழா நடத்திய பெற்றோர்; நெகிழ்ச்சி சம்பவம்.!!
வீட்டை விட்டு ஓடிப்போன திருநங்கையை (transgender son) தேடிக் கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வந்து பூப்புனித நீராட்டு விழாவினை வெகு விமரிசையாக பெற்றோர் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் இந்திராநகரில் வசிக்கும் கொளஞ்சி-அமுதா எனும் தம்பதியினரின் மகன் நிஷாந்த் ( வயது 21).
இவரது தந்தை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாகவும், அவரது தாய் விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், 21 வயதாகும் நிஷாந்த் டிப்ளமோ கேட்ரிங் முடித்துள்ளார்.
கடந்த ஆண்டு இவருக்கு உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அவரது பெற்றோரிடம் கூறிய நிலையில், அவர்கள் கண்டித்துள்ளனர்.
ஒருகட்டத்தில் நிஷாந்த் வீட்டை விட்டே ஓடிவிட்டார்.
பிற திருநங்கைகளிடம் தஞ்சமடைந்திருக்கிறார்கள். இந்த விஷயம் கேள்விப்பட்டு பெற்றோர் பதைபதைத்து போய்விட்டனர்.
அதனால், அங்கு சென்று, நிஷாந்த்தை சமாதானப்படுத்தி மறுபடியும் வீட்டுக்கே அழைத்து வந்தனர்..
நிஷாந்தின் உணர்வுக்கு மதிப்பளித்து பெயரை நிஷா என்று மாற்றினர்.
அத்துடன் அவர் வீட்டை வெளியேறிய நாளான மார்ச் 1 அன்றே பூப்பருவத்தைக் கொண்டாடும் வகையில், அவருக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்த முடிவு செய்தனர்.
அதன்படியே நேற்றைய தினம் ஊரையே கூட்டி விழா நடத்தினர். நிஷாவை அலங்கரித்து மாலை மரியாதையுடன் உட்காரவைத்து மஞ்சள் நீராட்டு விழாவை தடபுடலாக நடத்தினர்.
இந்த நிகழ்வில் குடும்பத்தினர், உறவினர்கள், அக்கம் பக்கத்தினர், நிஷாவுடன் படித்த நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
விழாவுக்கு வந்திருந்தவர்கள் இதை பற்றி சொல்லும்போது, முதன்முறையாக திருநங்கை ஒருவரை அங்கீகரித்து அவருக்கு விழா நடத்தியிருப்பது சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தங்களுக்கு மகிழ்ச்சியே.. பல பெற்றோர்கள் இப்படி மனம் மாறி, தங்கள் பிள்ளைகளை அரவணைத்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.
தன்னை புரிந்துகொண்ட இப்படிப்பட்ட பெற்றோர், சொந்தபந்தங்கள் கிடைக்க, கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று நெகிழ்ந்து சொல்கிறார் நிஷா.
பொதுவாக ஒரு நபர் சிகிச்சை மூலம் திருநங்கையாக மாறிய பின், மூத்த திருநங்கைகளின் இருப்பிடத்திற்குச் சென்று அங்கு ஐக்கியமாகிவிடுவர்.
அவ்வாறு ஐக்கியமாகும் நபருக்கு மூத்த திருநங்கைகள் விழா நடத்தி, மஞ்சள் நீராட்டு விழா நடத்தி அவரை பெண்ணாக அங்கீகரிப்பர்.
ஆனால் முதல்முறையாக திருநங்கையின் குடும்பத்தினரே இதுபோன்று செய்துள்ளது அப்பகுதியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
