Tamil News
புல்லட்டை ஓட்டிப் பார்க்கிறோம் என கூறி புல்லட்டுடன் எஸ்கேப் ஆன இளம் காதல் ஜோடி; அதிர்ச்சியில் ஷோரூம் உரிமையாளர்..!!
சேலத்தில் இரு சக்கர வாகனத்தை டெஸ்ட் ட்ரைவ் செய்வதாய் கூறி விட்டு புல்லட் வாகனத்துடன் எஸ்கேப்பான காதல் ஜோடியை கோலாரில் மற்றொரு இடத்தில் திருடும் போது போலீசார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.
சேலம் டவுன் சாந்தி தியேட்டர் பகுதியில் ராம் பாலாஜி என்பவருக்கு சொந்தமான, பழைய இரு சக்கர வாகனங்களை வாங்கி, விற்பனை செய்யும் கன்சல்டிங் உள்ளது.
இந்த கன்சல்டிங் கடைக்கு கடந்த ஜனவரி 23-ஆம் தேதி இரண்டு இளம் ஜோடியினர் வந்துள்ளனர்.
ஒரு புல்லட் ஒன்று வாங்க வந்திருப்பதாக கூறி, அங்கிருந்த விலை உயர்ந்த டுவீலர்களை அவர்கள் சிறிது நேரம் பார்வையிட்டுள்ளனர்.
இதில் 1.75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு டுவீலரை தேர்வு செய்துள்ளனர் .
பின்னர் வண்டியை, ஓட்டிப்பார்த்து விட்டு வருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
கடை ஊழியர்களும், இன்னொரு ஜோடி இருக்கிறதே என்ற எண்ணத்தில் நம்பி வண்டியை எடுத்துப்போக அனுமதித்துள்ளனர் .
நீண்ட நேரம் ஆகியும் வண்டியை எடுத்து கொண்டு ஜோடியாக சென்றவர்கள் மீண்டும் திரும்ப வில்லை.
திரைப்படத்தில் நடிகர் வடிவேலு ஓட்டிப்பார்த்து விட்டு வாங்கிக் கொள்வதாக கூறி டூவிலர் மற்றும் ஆட்டோவுடன் எஸ்கேப் ஆவார்.
அதே பாணியில் இந்த ஜோடியும் எஸ்கேப் ஆகி விட்டனர்.
நீண்ட நேரம் ஆன நிலையில் திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த கடை ஊழியர்கள், இன்னொரு ஜோடியிடம் அவர்களை தொலைபேசியில் அழைக்குமாறு கேட்டுள்ளனர்.
ஆனால், அவர்கள் யார் என்றே எங்களுக்கு தெரியாது என்றும் நாங்கள் தனியாக வந்துள்ளோம் என்றும் கூறியுள்ளனர் .
இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், கடை உரிமையாளர் ராம் பாலாஜிக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர் கடையில் இருந்த சிசிடிவி கேமரா மூலம் பதிவான காட்சிகளை பார்த்து, இரண்டு ஜோடிகளுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் அடைந்த ஊழியர்கள், கடையில் இருந்த இன்னொரு ஜோடியை பிடித்து டவுன் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்து ஒப்படைத்தனர்.
காவல்துறையினர் விசாரித்தபோது, வண்டியில் சென்ற பெண்ணை மட்டும் எங்களுக்கு தெரியும் என பிடிபட்ட ஜோடி கூறியுள்ளனர்.
அதன் பேரில் தகவல் தெரிவிக்கப்பட்டு, வண்டியில் சென்ற பெண்ணின் உறவினர்கள் டவுன் குற்றப்பிரிவுக்கு வந்தனர்.
போலீஸ் விசாரணையில் எடுத்துச் செல்லப்பட்ட இருசக்கர வாகனத்திற்கு முன்பணமாக ரூ.25 ஆயிரம் கொடுத்திருப்பது தெரியவந்தது.
மேலும் தப்பியது பிரவீன்(25) என்பதும் மற்றொரு ஜோடி அரவிந்த் என்பதும் தெரியவந்தது.
இவர்கள் சேலம் பொன்னம்மாப்பேட்டை செங்கல் அணையைச் சேர்ந்த பழனிசாமி என்பவரின் மகன்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
அதே நேரத்தில் புல்லட்டை எடுத்து சென்ற பிரவீன் உடன் காதலி ப்ரீத்தி(25) என்ற இளம் பெண் என்பதும் தெரியவந்தது.
இந்நிலையில் பெற்றோரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தங்களின் மகள் எங்கு இருக்கிறார் என்பது தெரியாது என்று கூறிவிட்டனர்.
இதனையடுத்து புல்லட் வாகனத்துடன் தலைமறைவான காதல் ஜோடியை, சேலம் மாநகர போலீஸ் ஆணையர் நஜ்முல் ஹோதா உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் வாகனத்தை திருடிய காதல் ஜோடி பெங்களூரில் இருப்பதாக தகவல் அறிந்து, கோலார் பகுதியில் பதுங்கியிருந்த பிரவீன், ப்ரீத்தி ஆகிய , இருவரையும் கைது செய்து இன்று சேலம் அழைத்து வந்தனர்.
இதனையடுத்து வாகனத்தை திருடிய வழக்கில் காதல் ஜோடியான பிரவீன், ப்ரீத்தி வந்து இருவரையும் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
