Tamil News
போலி ஆவணம் மூலம் ரூ.65 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை கிரையம் செய்ய லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்ற சார் பதிவாளர் கைது…!!
65 கோடி மதிப்புள்ள நிலத்திற்குப் போலி ஆவணம் தயாரிக்க உதவியதாகவும், அதை முறைகேடான முறையில் பதிவு செய்துள்ளதாகவும் திருப்போரூர் சார்பதிவாளர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு பகுதியில் பிரபலமான கிரானைட் நிறுவனத்திற்குச் சொந்தமான 5 ஏக்கர் 88 சென்ட் நிலம் உள்ளது.
கடந்த 1971-ம் ஆண்டு தென்சென்னை மாவட்ட சார்பதிவகத்தில் கிரயம் செய்யப்பட்ட அந்த நிலத்திற்கு, அந்த நிறுவனம் சார்பில் பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் பெறப்பட்டுள்ளன.
இந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 65 கோடிக்கு மேல் இருக்கும் என்கிறார்கள்.
இந்நிலையில் மதுராந்தகத்தைச் சேர்ந்த மதுரை என்பவர், அவர் கிரயம் பெற்றது போலப் போலி ஆவணம் தயார் செய்துள்ளார்.
மேலும் அந்த ஆவணம் தொலைந்து விட்டதாகக் கூறி மதுராந்தகம் காவல் நிலையத்தில் புகார் அளித்து சான்று பெற்றுள்ளனர்.
போலி ஆவணத்தை வைத்து திருப்போரூர் சார்பதிவகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த காசி என்பவர் மூலமாகச் சார்பதிவாளர் அலுவலகத்தில் கொடுத்து உண்மை நகலாக புதிய ஆவணத்தைப் பெற்றுள்ளார்.
அந்த ஆவணத்தை வைத்துக் கடந்த 2020-ல் தனது மகன் ரஞ்சித் குமாருக்கு செட்டில்மென்ட் செய்துள்ளார்.
போலி ஆவணத்தைப் பதிவு செய்வதற்குத் திருப்போரூர் சார் பதிவாளர் செல்வசுந்தரி லஞ்சம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
நில உரிமை தங்கள் பெயரிலிருந்து மாற்றப்பட்டதை அறிந்த அந்த தனியார் நிறுவனம், தாம்பரம் பெருநகர காவல் ஆணையர் ரவியிடம் புகார் அளித்தது.
இதையடுத்து இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கடந்த 15 நாட்களுக்கும் மேலாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், கடந்த 13ம் தேதி தாம்பரம் மாநகர தனிப்படை போலீசார் தற்காலிக ஊழியர் காசி, அவரது மருமகன் பிரபாகரன், போலி ஆவணம் எழுதிக்கொண்ட ரஞ்சித்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
இந்நிலையில், போலி ஆவணத்தை பதிவு செய்த சார்பதிவாளர் செல்வசுந்தரி ஏற்கனவே லஞ்ச வழக்கு ஒன்றில் கைதாகி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
நேற்று மாலை சென்னைப் புறநகரில் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த அவரை தனிப்படை போலீசார் கைது, செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
