Tamil News
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை போட்டுத் தள்ளிய மனைவி; தடயத்தை மறைக்க மிளகாய் பொடி தூவிய கொடூரம்..!
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து விட்டு தப்பிக்க நினைத்து கொலை நடந்த இடத்தில் மிளகாய் பொடி தூவிய கள்ளக்காதல் ஜோடியை சாமர்த்தியமாக கைது செய்தனர் போலீசார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள பெரிய ஆவேரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பா (50)
இவர் கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி பாஸ்தா மேரி, இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று பெரிய ஆவேரிப்பள்ளி கிராமத்திலுள்ள கிராம ஊராட்சி சேவை மையம் கட்டிடம் அருகே சின்னப்பா உடலில் மிளகாய் பொடி தூவப்பட்டு உயிரிழந்து கிடந்தார்.
இதுகுறித்து அறிந்த தளி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து சின்னப்பாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர் தளி போலீசார்.
இந்நிலையில் சின்னப்பாவை கொலை செய்ததாக அவரது மனைவி பாஸ்தா மேரி, மற்றும் அவரது கள்ளக்காதலன் துரைசாமி ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் சின்னப்பா தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் நேற்று அவருக்கு அளவுக்கு அதிகமாக மது கொடுத்து குடிபோதையில் இருந்த அவரை கழுத்தை நெரித்து கொன்றதாகவும் சந்தேகம் வராமல் இருக்க மிளகாய் பொடி தூவியதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்த தளி காவல்துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
