Tamil News
புகார் அளிக்க வந்த பெண்ணிடம் பாலியல் தொல்லை, பண மோசடியில் ஈடுபட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்..!!
புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, அவரிடம் பண மோசடியில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மனைவி கோமதி.
இவர் தனது வீடு கட்டும் பணியை, அலங்காநல்லூரைச் சேர்ந்த பொறியாளர் முருகன் என்பவரிடம் ஒப்படைத்துள்ளார்.
முருகன் அதிகப் பணத்தை வாங்கிக் கொண்டு வீடு கட்டும் பணியை முடிக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால், ஒத்தக்கடை காவல் நிலையத்தில் இது தொடர்பாக கோமதி புகார் அளித்தார்.
இந்த புகார் தொடர்பாக காவல் நிலையத்திற்கு சென்று வந்த போது, கோமதிக்கும் காவல் ஆய்வாளர் ஆனந்த தாண்டவம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
அப்போது, ஆனந்த தாண்டவம், கோமதியிடம் ரூ. 6 லட்சம் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதில், மன உளைச்சலுக்கு ஆளான கோமதி தற்கொலைக்கு முயன்ற போது உறவினர்கள் காப்பாற்றி உள்ளனர்.
இந்நிலையில், தனது பணத்தை மீட்டு தருமாறு, கடந்த ஏப்ரல் மாதம், டிஜிபி அலுவலகத்தில் கோமதி புகார் அளித்தார்.
இதுதொடர்பாக துறை ரீதியாக நடத்தப்பட்ட விசாரணையில், அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க், காவல் ஆய்வாளர் ஆனந்த தாண்டவத்தை பணியிடை நீக்கம் செய்து இன்று உத்தரவிட்டார்.
