Tamil News
“திருமண வரன்களை தடை செய்பவர்கள் அவர்களின் மகள் அல்லது மருமகளை திருமணம் செய்து தர வேண்டும்” – வில்லங்கமாக ஒட்டப்பட்ட போஸ்டர்…!!
கன்னியாகுமரியில் திருமண வரன்களை தடுத்து நிறுத்தும் நபர்களுக்கு எதிராக இளைஞர்கள் போஸ்டர் ஒட்டிய சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த போஸ்டரின் புகைப்படம் சமூக வலைத் தளங்களால் வைரலாக பரவி வருகிறது.
திருமணங்களில் வரன் பார்ப்பது பல்வேறு சிக்கலான காரியமாகும்.
ஆனாலும், இணையம் வளர்ந்துவிட்ட இந்த காலத்தில் மேட்ரிமோனி மூலமாக எளிதில் தங்களுக்கு தேவையான வரன்களை மக்கள் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்.
இருப்பினும் கூட திருமணம் என்பதே பல்வேறு சிக்கல்களை உள்ளடக்கியது தான்.
குறிப்பாக வரன் பற்றிய விசாரணையின் போது நடக்கும் களேபரங்கள்.
அப்படியான சிக்கலை தான் கன்னியாகுமரி மாவட்டத்தின் கருங்கல் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் சந்தித்திருக்கிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அடுத்த பாலவிளை கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர், உள்ளூரை சேர்ந்த சிலர் தங்களுக்கு வரும் வரன்களை தடுத்து நிறுத்துவதாக கோபமடைந்துள்ளனர்.
பாலவிளை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வரன்களை தடுக்கும் ஆசாமிகள் வீட்டில் உள்ள பெண்களையே வரனாக கேட்கும் விதத்தில் வில்லங்க போஸ்டர் ஒன்றை அடித்து தெருவுக்கு தெரு பயணிகள் நிழல் குடை, குட்டி சுவர் என வரன்களை கெடுக்கும் ஆசாமிகள் அச்சப்படும் அளவுக்கு ஒட்டியுள்ளனர்.
அதில் “திருமண வரன்களை தடை செய்பவர்கள் கவனத்திற்கு தடை செய்பவர்கள் அவர்களின் மகள் அல்லது மருமகளை திருமணம் செய்து கொடுப்பதாக இருந்தால் மட்டடும் தடை செய்யட்டும்.
குறிப்பு- சில நபர்களின் அடையாளம் தெரியும் அடுத்த போஸ்டரில் அவர்களின் புகைப்படம் வைக்கப்படும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வில்லங்க போஸ்டர் விவகாரம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படும் நிலையில், இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கு முன்னதாக கடந்த 2021-ம் ஆண்டு கருங்கல் ஆயினிவிளை பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் ஒருபடி மேலே போய் அந்த பகுதியில் பலசரக்கு கடை நடத்தும் நபர் ஒருவரின் புகைப்படத்துடன் போஸ்டர் அடித்து ஒட்டி தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
