Tamil News
புள்ளிங்கோ ஸ்டைலில் முடி வளர்த்து வந்த மாணவர்கள்; கத்தரிக்கோல் வைத்து முடி வெட்டிவிட்ட தலைமை ஆசிரியர்…!
அண்மைக்காலமாக மாணவர்கள் பள்ளி வளாகங்களில் ஆசிரியர்களை தாக்குவது, சக மாணவர்களை ராகிங் செய்வது, நாற்காலிகளை உடைத்தெறிவது என வரம்பு மீறி அத்துமீறி வருகின்றனர்.
பள்ளி மாணவர்கள் உயரிய ஒழுக்கத்துடன் திகழ வேண்டும் என்பதற்காக சீருடை தொடங்கி சிகை அலங்காரம் வரை கண்ணியமாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் எப்போதும் பள்ளி வளாகங்களில் மாணவர்கள் இன்ன விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் உண்டு.
இன்றைய கால கட்டங்களில் குறிப்பாக பள்ளி மாணவர்களின் சிகை அலங்காரம் முதல் சீருடை வரை நவீன காலத்திற்கு ஏற்ப வடிவம் மாறி இருக்கின்றது. ஆனால் பள்ளி வளாகத்திற்கு ஏற்ப அவை இருக்கின்றதா என்றால் இல்லை என்பதே உண்மை.
இந்த நிலையில் மாணவர்களை நல்வழிப்படுத்த அதிரடியாக கத்திரிக்கோல், தேங்காய் எண்ணையுடன் அரசு பள்ளி தலைமையாசிரியர் தானே களத்தில் இறங்கியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் வள்ளலார் அரசு பள்ளியில் சுமார் 1126-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளிக்கு 6 மாதத்துக்கு முன்பு தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றவர் சேவியர் சந்திரகுமார்.
இங்கு பயிலும் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கட்டுப்படாமல் மோசமான சிகை அலங்காரம் செய்து வருவது, கையில் வண்ண கயிறுகள் கட்டுதல், மாணவிகள் தலைமுழுதும் பூ வைத்தும் மற்றும் முக அலங்காரம் செய்து வருவதும் என காணப்பட்டனர்.
இவற்றை தடுக்க முடியவில்லை என பெற்றோர்கள் கூறினர். இதனால் அதிரடியாக களத்தில் இறங்கினார் தலைமை அசிரியர்.
அவரே கையில் கத்தரிக்கோல் மற்றும் எண்ணெயுடன் பள்ளியின் நுழைவு வாயிலில் நின்று கொண்டு வரும் மாணவர்களை தடுத்து நிறுத்தி தலையில் எண்ணை தேய்ப்பது, முடி வெட்டுவது மற்றும் கையில் கயிறு இருந்தால் அவற்றை அறுத்து எறிவது என செயல்பட்டார்.
மாணவிகள் அதிக பூ வைத்துக் கொள்ளக்கூடாது.
அலங்காரம் செய்து வரக்கூடாது அனைவரும் சமமாக உடை அணிந்து வர வேண்டும் என வலியுறுத்தினார்.
தலைமையாசிரியரின் இந்த செயலை பெற்றோர்கள் வரவேற்றனர்.
ஆனால், சமூகவலைதளத்தில் பலர், மாணவ, மாணவிகளின் தனிப்பட்ட விருப்பத்தில் தலையீடுவதாக கூறி கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.