Tamil News
தொடரும் சோகம்; முடி திருத்தி வர ஆசிரியர் சொன்னதற்காக பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்த மாணவன்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், கடலூர் அருகே தலைமை ஆசிரியர் தலைமுடியை வெட்டி, வர சொன்னதற்காக பூச்சி மருந்து குடித்து பனிரெண்டாம் வகுப்பு மாணவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த முகாசபருர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவன் ஒருவன் பிளஸ் 2 படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், வழக்கம் போல அந்த மாணவன் பள்ளிக்கு சென்றுள்ளார்.
அப்போது அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மரியா ஜோசப் ராஜா அதிகளவில் தலைமுடி வைத்துள்ள மாணவர்களை தனியாக அழைத்து, தலை முடியை வெட்டிக்கொண்டு பள்ளிக்கு வர வேண்டுமென என கூறியுள்ளார்.
அப்பொழுது மாணவன் ஜெயக்குமார் தலை முடியை வெட்ட மாட்டேன் என்று கூறியதாகவும், அதற்கு தலைமை ஆசிரியர், தலை முடியை வெட்ட கூடாது என்று நினைத்தால் பள்ளியின் பெற்றோர் கழக பொறுப்பாளர்களிடம் கையொப்பம் வாங்கி வா என்று கூறியதாக சொல்லப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்துள்ளார் அந்த மாணவர்.
இதனையடுத்து, மருந்து கடையில் எறும்புக்கு பயன்படுத்தப்படும் பூச்சி மருந்தை வாங்கி, தண்ணீரில் கலந்து குடித்துவிட்டு மீண்டும் பள்ளிக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், மாணவன் பள்ளியில் திடீரென மயங்கியதாகவும், சக நண்பர்களிடம் மருந்து குடித்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஆசிரியர்கள் மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பெற்றோர் மாணவனை, மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
