Tamil News
அரசு பள்ளி கழிவறையை சுத்தம் செய்த பிஞ்சு மாணவர்கள்; வெளியான அதிர்ச்சி வீடியோ..!
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே அரசு பள்ளி மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த முள்ளம்பட்டி பகுதியில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள அந்த பள்ளியில், முள்ளம்பட்டி மற்றம் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர் என இருவர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், பள்ளியில் உள்ள மாணவர்களை ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தி கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாக கூறப்படுகிறது.
இதை அடுத்து அங்குள்ள மாணவர்கள் சிலர் பள்ளி கழிவறையை சுத்தம் செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தை அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
அந்த வீடியோவில் பேசிய சிறுவன், தான் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருவதாகவும், பள்ளிக்கு முதலில் வருபவர்கள் கழிப்பறையை தூய்மை செய்ய வேண்டும் என ஆசிரியை கூறியதால், தூய்மை செய்வதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதை அடுத்து, வட்டார கல்வி அலுவலர் அமுதா, புகாருக்கு உள்ளான முள்ளம்பட்டி துவக்கப் பள்ளிக்கு இன்று நேரடியாக சென்று பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் மாணவர்களிடம், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து, விசாரணை அறிக்கை கல்வி மாவட்ட அலுவலர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி ஆகியோரிடம் வழங்கப்படும் எனவும், அதன் பிறகு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
