Tamil News
விபத்தில் இறந்து போன தாய்மாமன் சிலை செய்து, அதன் மடியில் வைத்து குழந்தைகளுக்கு நடந்த காதணி விழா; நெகிழ்ச்சி சம்பவம்..!!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் விபத்தில் இளைஞர் உயிரிழந்த நிலையில், தத்ரூபமாக அவரது சிலையை உருவாக்கி சிலையின் மடியில் சாகோதரியின் குழந்தைகளை அமர வைத்து காதணி விழா நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வினோபா நகரைச் சோ்ந்த செளந்தரபாண்டி-பசுங்கிளி தம்பதியினரின் மகன் எஸ்.பாண்டித்துரை (21).
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு லெக்கையன்கோட்டை அருகே நடந்த சாலை விபத்தில் பாண்டித்துரை உயிரிழந்தாா்.
இந்நிலையில் பாண்டித்துரையின் சகோதரி எஸ்.பிரியதா்ஷினியின் குழந்தைகளான தாரிகா, மோனேஷ் ஆகியோரின் காதணி விழா, ஒட்டன்சத்திரத்திலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் தாய்மாமன் பாண்டித்துரையின் சிலிக்கான் உருவச்சிலை செய்யப்பட்டு, அவரது வீட்டில் இருந்து மண்டபம் வரை குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியில் ஊா்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.
பாண்டித்துரை இளம் வயதிலேயே இறந்து போனதால் அவருடைய சிலிக்கன் உருவச் சிலையை வைத்து தாய்மாமன் செய்முறைகள் செய்யப்பட்டு அவரது சிலையின் மடியில் வைத்து குழந்தைகளுக்கு காது குத்தப்பட்டது.
இதுபற்றி பாண்டித்துரையின் தாய் பசுங்கிளி கூறும்போது:
அக்காள் குழந்தைகளுக்கு தன்னுடைய மடியில் வைத்து காதணி விழா நடைபெற வேண்டும் என்பது பாண்டித்துரையின் நீண்ட நாள் கனவு ஆகும் இதனை அடிக்கடி கூறி வந்தார்.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற விபத்து ஒன்றில் இறந்து போனார்.
இதில் பாண்டித்துரையின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் பெங்களூருவில் சிலை செய்பவரிடம் பாண்டித்துரையின் அச்சு அசல் உருவம் போலவே தத்துரூபமாக இருக்கும்படி சிலை செய்யச்சொல்லி இங்கு கொண்டு வந்தோம்.
இதன்மூலம் என்னுடைய மகனின் விருப்பம் நிறைவேறியது.
பேரக் குழந்தைகளுக்கும் தாய்மாமன் மடியில் அமர்ந்து காது குத்தும் வாய்ப்பு கிடைத்தது என் மகளின் ஆசையும் நிறைவேறியது என்றார்.
மேலும் இந்த சிலை செய்வதற்கு 5 லட்சம் ரூபாய் செலவானது என்றும் கூறினார்.
ஒட்டன்சத்திரத்தில் இதுபோன்ற வினோதமான முறையில் சிலையில் அமரவைத்து குழந்தைகளுக்கு காதணி விழா நடைபெற்றது அப்பகுதி மக்களிடையேயும் உறவினர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
